அதிமேதாவி அங்குராசு!
நோய்க்கு இடங்கொடேல்!உணவை, மருந்து போல் உண்ட காலம் மாறிவிட்டது. இன்று மருந்தை உணவு போல் உட்கொள்ளும் நிலை நிலவுகிறது. இது ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. உணவுப் பழக்கத்தை முறைப்படுத்திக் கொண்டால் நலமுடன் வாழலாம். உலகில், சமையல் முறை வேகமாக மாறி வருகிறது. சமைக்கும் பழக்கமே பல குடும்பங்களில் இல்லை. வீட்டில் சமைக்கும் உணவு தான் ஆரோக்கியம் தரும். காய்கறி, தானியம், இறைச்சியை வேக வைக்க, சிறு தீயை பயன்படுத்தலாம். காய்கறிகளை தனித் தனியே, கொதிக்கும் நீரில் போட்டு பதமான பின் சமைத்தால், சத்துகள் வீணாகாது.கால முறைமை!பருவ காலங்களுக்கு ஏற்ப, உரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். கோடை காலத்தில், வெந்நீர் பருகுவது உடல் சூட்டைக் குறைக்கும். கசப்பு, துவர்ப்பு சுவைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளரி, பூசணி போன்ற நீர் காய்கறிகளை அதிகம் பயன்படுத்தலாம். இவை எல்லாம், உடல் வெப்பத்தை சமநிலையில் பேணும்.குளிர் காலத்தில் இனிப்பு, புளிப்பு, காரச்சுவை மிகுந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். இவை, உடலுக்கு, கதகதப்பும், நரம்புக்கு முறுக்கும் தரும். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், சேப்பங்கிழங்கு போன்றவை இதம் தரும்.சுவையும் சத்தும்!சுவை அறிந்து உண்டால் நோய்கள் அண்டாது. உடல் உறுப்புகளின் செயல் திறனை மனதில் கொண்டு, சுவையை தேர்வு செய்ய வேண்டும்.இனிப்பு - தசையை பெருக்கி வலு சேர்க்கும்புளிப்பு - அமில சத்தை உற்பத்தி செய்யும்உப்பு - எலும்புக்கு வலு சேர்க்கும்காரம் - உணர்வை பெருக்கி பலம் தரும்கசப்பு - நிணநீர் சுரக்க உதவும்துவர்ப்பு - ரத்தத்தை உற்பத்தி செய்யும்.வயதுக்கு ஏற்ப சுவையின் தேவை மாறுபடும். தசைகளுக்கு உகந்தது என்பதால் தான், இனிப்பு மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. குழந்தை உணவில் இனிப்பும், உப்பும் அதிகம் இருக்கலாம்.வாலிப பருவத்தில், காரம், புளிப்பு, இனிப்பு சுவையை அதிகம் சேர்க்கலாம். 40 வயதைக் கடந்த பின், கசப்பு, துவர்ப்பு சார்ந்த உணவுகளை அதிகம் சேர்த்தால் நலம் மிகும். முதுமைப் பருவத்தில், எல்லா சுவைகளையும் அளவறிந்து உண்ண வேண்டும்.காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்படும் போது, புளிப்புச்சுவையை தவிர்க்க வேண்டும்.ரத்த அழுத்த பாதிப்பு இருந்தால், உப்பு, கசப்பு கூடாது. தோலில் நோய் பாதிப்பிருந்தால், உப்பு, புளிப்பு கூடாது.நேரம் தவறேல்!துாங்கி எழுந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பின் உண்பது நல்லது. சாப்பிடும் நேரத்தை முறைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். உரிய கால இடைவெளிப்படி உண்ண வேண்டும். * காலை உணவு, 7:30 - 8:00 மணி* பகல் உணவு, பகல் 12:30 - 1:00 மணி* மாலை சிற்றுண்டி, பிற்பகல் 3:30 - 4:00 மணி* இரவு உணவு, 7:30 - 8:00 மணி. இவ்வாறு முறைப்படுத்தி, நேரந்தவறாமல் சாப்பிடுவது நோயை தடுக்கும் மருந்தாக அமையும். அளவுடன் உண்!உணவை, வயிறு முட்டும் அளவு சாப்பிடக்கூடாது. வயிற்றில் உணவு, 50 சதவீதம்; நீர், 25 சதவீதம்; காலியாக, 25 சதவீதம் இடம் இருக்க வேண்டும்; அப்படியிருந்தால் தான், உணவு நன்றாக அரைப்பட்டு, உரிய விகிதத்தில் சத்துகளாக பிரியும்; முறைப்படி கழிவு வெளியேறும். வாயில் நன்கு மென்று, உமிழ் நீர் சேர கூழாக்கி, உணவை விழுங்க வேண்டும். அப்போது எல்லா சத்துக்களும் உடல் உறுப்புகளில் சேரும்.'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்'இது, வள்ளுவர் எழுதிய குறட்பா. உண்ட உணவு செரிப்பதை அறிந்து, மீண்டும் உண்டால் நோய் வராது; அவ்வாறு செய்தால், உடலுக்கு மருந்தே தேவையில்லை என்பதே இதன் பொருள். குழந்தைகளே... இந்த மேலான அறிவுரையை வாழ்க்கையில் கடைபிடித்து, உடல் நலம் பேணி சிறப்பாக வாழ்வோம். - என்றென்றும் அன்புடன், அங்குராசு.