உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு - ஏற்காடு!

எளிய மக்களின் மலை வாசஸ்தலம் ஏற்காடு. சேலம் மாவட்டம், சேர்வராயன் மலையில் கடல் மட்டத்திலிருந்து, 4,330 அடி உயரத்தில் இருக்கிறது. இங்கு செல்லும் சாலை, 20 கொண்டை ஊசி வளைவுகள் உடையது. சேலம் நகரில் இருந்து பேருந்தில், 1 மணி நேரத்தில் செல்லலாம். பழங்காலத்தில் மலை உச்சியில் ஏரியுடன் காடாக இருந்ததால், 'ஏரிக்காடு' என அழைக்கப்பட்டது. பின்னாளில் திரிந்து, 'ஏற்காடு' என்றாகியது. இங்கு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக, காபி பயிர் சாகுபடியாகிறது. ஏலம், கிராம்பு, மிளகு, பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் உற்பத்தியாகின்றன.மலை உச்சியில், மரங்களின் நடுவில், பரந்த ஏரி எழிலாக உள்ளது. இங்கு, பார்க்க வேண்டிய பகுதிகளின் சிறப்பை காண்போம்...பக்கோடா பாயிண்ட்: இது, ஏற்காட்டின் ஒரு முனை. இங்கு, ராமர் கோவில் உள்ளது; மலையின் மற்றொரு பகுதியில், அழகிய நீர்வீழ்ச்சி இருக்கிறது; அடர்ந்த மரங்களுக்கிடையில், தண்ணீர் ஆறாக பாய்வதை காணலாம்.பொட்டானிக்கல் காடு: சேர்வராயன் கோவில் செல்லும் வழியில், 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 5,000 வகை தாவரங்கள் இருக்கின்றன; இங்கு, 'பிக்சர் பிளான்ட்' என்ற புலால் உண்ணும் அதிசய செடியும் வளர்ந்துள்ளது. தட்டினால் ஓசை வரும் வினோத பாறை ஒன்றையும் காணலாம். கல்லால் எறிந்தால் கூட ஓசை வரும்.ரெட்ரீஸ்: ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து, 3 கி.மீ., துாரத்தில் இந்த பார்வை முனை உள்ளது. போஸ்கோ கிறிஸ்தவ சபை நிர்வாகத்தால் கட்டப்பட்டது. இங்கு, ஏசுநாதரின் சிலுவைப்பாடுகளை, 14 பகுதிகளாக பிரித்து எழுதி வைத்துள்ளனர்.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி: இப்பகுதியில் அறப்பளிசுவரர் கோவில் உள்ளது. இது அமைந்துள்ள மலையின் பெயர், சதுரகிரி. இதன் எதிரே, 10 கி.மீ., துாரத்தில், இயற்கை எழில் சூழ, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி இருக்கிறது; 130 அடி உயரத்திலிருந்து, தண்ணீர் அருவியாக கொட்டுகிறது.லேடீஸ் சீட்: ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து, 3 கி.மீ., துாரத்தில் இருக்கிறது. இங்கிருந்து, அலை போல வெண்பனிப் படலத்திற்கு கீழே சேலம், மேட்டூர் நகரங்களைக் காணலாம்.கரடிக் குகை: சேர்வராயன் கோவில் அருகே இருக்கிறது. இங்கு கரடிகள் வசித்ததாக கூறப்படுகிறது. இதில் எவரும் உள்ளே செல்வதில்லை. இருளாக இருக்கும். எங்கு முடிகிறது என, இதுவரை கண்டறியப்படவில்லை. ஏற்காட்டில் அரசுக்கு சொந்தமான பழப்பண்ணை உள்ளது. இங்கு பல்வேறு ரக பழங்களை சுவைக்கலாம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !