உள்ளூர் செய்திகள்

பதற்றம் விரட்டு!

கடலுார் மாவட்டம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2000ல், 8ம் வகுப்பு படித்த போது, சுதந்திர தின கலை நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தில் பங்கேற்க என்னை அழைத்தனர். நிகழ்ச்சி அன்று, சிலம்பாட்டத்திற்கு அணியும் சிறப்பு ஆடைகளை, மறதியால் வீட்டில் விட்டு வந்திருந்தேன்.கலை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழாசிரியை அலமேலு, மிகவும் கண்டிப்பானவர். அவரிடம் சொல்ல பயந்து தவித்தேன். நிலைமையை புரிந்த என் தோழி, உடைகள் கொடுத்து உதவினாள். அவை மிகப் பெரியதாக இருந்தன. சரி செய்யும் விதமாக, மடித்து ஊக்கு போட்டு அணிந்து, பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். தீவிர பயிற்சியின் போது, ஊக்கு தெறித்து விழுந்தது. உடை தளர்ந்து சிரமம் தந்தது. அதை சரி செய்ய வழி தெரியாததால் கண்ணீர் பெருகியது. பயிற்சியை மேற்பார்வையிட்ட தமிழாசிரியை விபரம் கேட்டார். நடந்தவற்றை கூறினேன். என் உடைகளை சரி செய்து நேர்த்தியாக்கினார். பின், பதற்றம் இன்றி, சிலம்பம் சுற்றி, பரிசுகளுடன், பாராட்டும் பெற்றேன்.நிகழ்ச்சி முடிந்த பின், 'இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் பயத்தை தவிர்த்து, உணர்ச்சிவச படாமல், தெளிவான முடிவு எடுக்க வேண்டும். அந்த பயிற்சியை பெறுவதற்காகத்தான் தமிழ் துணைப்பாட பகுதியில், பீர்பால், தெனாலிராமன் கதைகளை படிக்கிறீர்கள்...' என்று, கனிவுடன் கூறினார்.இப்போது என் வயது, 35; பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறேன். குடும்பத்திலும், பணியிடத்திலும் இக்கட்டான சூழ்நிலை வரும்போது, உணர்ச்சி வசப்படாமல், தெளிவான முடிவுகள் எடுத்து நற்பெயர் வாங்குகிறேன்.- கே.நாகம்மாள், கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !