ரத்தத்தின் நிறம் சிவப்பு!
ரத்த சிவப்பு அணுக்களில், ஹீமோ குளோபின் என்ற வேதிப்பொருள் உள்ளது. ரத்தத்துக்கு இதுதான், சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடலில் உள்ள, அனைத்துச் செல்களுக்கும், பிராணவாயுவை எடுத்துச் செல்வதும் இதுதான். உடலில் ஹீமோ குளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்தசோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது, மருத்துவர்கள் சிவப்பு அணு செலுத்துவர். ஒரு சொட்டு ரத்தத்தில், 55 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும். சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள். எலும்புகளுக்கு மத்தியில் உள்ள வெற்றிடத்தில், மஜ்ஜை என்ற பொருள் இருக்கும். இது தான், ரத்தத்தில் சிவப்பு, வெள்ளை அணுக்கள், பிளேட்லட் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.ஹீமோ குளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டை கோஸ், முட்டை, இறைச்சி போன்றவற்றில், இரும்புச் சத்து அதிகம்; இவற்றை, உணவில் சேர்த்தால் ரத்தசோகை வராது.ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், நாட்டை காக்கும் படைவீரர் போல் செயல்படும். உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை, எதிர்த்துப் போராடுவது வெள்ளை அணுக்களே... உடலில், காயம் ஏற்பட்டால், ரத்தம் வெளியேறுவதை தடுக்கும் திறன், பிளேட்லட் என்ற அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, அடைப்பை ஏற்படுத்தி, கசிவை தடுக்கும். டெங்கு, மலேரியா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, பிளேட்லட் அணுக்களை உடலில் செலுத்துவர்.ரத்தத்தில் உள்ள திரவத்தின் பெயர் பிளாஸ்மா; 100 மி.லி., ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு, பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும்.பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், புரதப்பொருட்கள் இருக்கும். தீக்காயத்தால் பாதிக்கப்படுவோருக்கு, பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவர்.உடலுக்குள் ஒரு சுழற்சியில், 1.19 லட்சம் கி.மீ., துாரத்துக்கு பயணம் செய்கிறது ரத்தம். அதன் வேகம், மணிக்கு, 65 கி.மீ., அளவாகும். ஒரு மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.- பொ.பாலாஜிகணேஷ்