மரணத்தையும் வெல்லலாம்!
இப்படி கண்ணீரும் கம்பலையுமா நின்றுகொண்டிருந்த தன் கணவனைப் பார்த்த அவன் மனைவி, சிறிதும் கலங்காமல், ''நீங்கள் பயப்படவேண்டாம், கஷ்டம் வரும்போதுதான், நாம் நிலைகுலையாமல் நம் திறமை, புத்திசாலித்தனத்தைக் கொண்டு முயலவேண்டும். இப்போது நீங்கள் கவலைப்படுவது நல்லதல்ல. ''உங்களுக்கு ஆக வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும், அவனிடம் வாங்கிக்கொண்டு, எப்போது அவனிடம் வேலை தந்து அவனை அதில் ஈடுபடுத்த முடியாது என்று தோன்றுகிறதோ, அப்போது அவனை என்னிடம் அனுப்புங்கள். என்னால் முடிந்தவரை நான் அவனுக்கு வேலை இடுகிறேன். ஒருவேளை நான் ஏவும் வேலையைச் செய்ய முடியாமல் அவன் ஓடிவிட்டாலும் ஓடிவிடுவான்!'' என்று சொன்னாள்.மனைவி கூறியதை அவன் வெறும் பேச்சு என்றே எண்ணினான். பிழைத்து இருக்கும்வரை லாபம் என்று முடிவு செய்து அவனுக்கு வேலையிடத் தொடங்கினான்.அவனுக்கும் இருபத்தைந்து முதல் முப்பது சிற்றூர்களில் நிலங்கள் இருந்தன. அந்த நிலங்களுக்கு எல்லாம் வரப்புக்கட்டி வரும்படி ஏவினான். அவை எல்லாம் பிரம்மராட்சதனுக்கு அரை நாழிகை வேலையாக இருந்தது. வயல்களுக்கு எல்லாம் தண்ணீர் இறைக்கும்படி கட்டளையிட்டான். அதை அவன் கால் நாழிகையில் முடித்துவிட்டான். தன்னுடைய மற்ற ஏரிகளையும் செப்பனிடச் செய்து வரும்படிச் சொன்னான். அடுத்து நாற்றுகள் வாங்கிக் கொடுத்து நடவு செய்யச் சொன்னான். புஞ்சைக் காடுகளையும் உழுது பயிரிடும்படிக் கட்டளையிட்டான். இந்த வேலைகள் எல்லாம் ஒரு சில நொடிப்பொழுதுகளில் முடிந்தன. மேற்கொண்டு எந்த வேலைகளை அவனுக்கு கொடுப்பது என்று தெரியாமல் உலுத்தன் திண்டாடினான். இராட்சதனோ, ''எனக்கு வேலை வேலை என்ன என்று சீக்கிரம் கட்டளையிடுங்கள்!'' என்று உலுத்தனை நச்சரித்துக் கொண்டிருந்தான்.எனவே, அவனைப் பார்த்து, ''என்னைப் பொருத்தவரையில் விரைவில் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் முற்றிலும் முடிந்துவிட்டது. தற்சமயம் மேலும் உனக்குக் கொடுக்க வேண்டிய வேலைகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆகவே நீ என் மனைவியிடம் சென்று, அவள் இடுகிற கட்டளைப்படி நட!'' என்றான் உலுத்தன்.அவர்கள் பேசிக்கொண்டிருக்குபோது அந்த இடத்திற்கு உலுத்தன் மனைவி வந்து சேர்ந்தாள். தன் தலையில் இருந்து தொங்கிய நீண்ட தலைமயிர் ஒன்றை எடுத்து ராட்சதன் கையில் கொடுத்து, ''அப்பா! ராட்சதா! நான் உனக்குக் கடுமையான வேலை ஒன்றும் கொடுக்க விரும்பவில்லை. நீ இத்தனை நேரமும் மண்வெட்டி, நாற்றுப்பிடுங்கி நடவு நட்டபடியால் உன் கைகள் இரண்டும் சிவந்து போயிருக்கின்றன. எனவே, நீ எனக்கு இப்போது செய்ய வேண்டிய வேலை மிக எளிதானது. இதோ பார்க்கிறாயே இந்த உரோமத்தை எடுத்துக்கொண்டுபோய் நேராக்கிக்கொண்டு வந்தால் போதும்?'' என்றாள்.முடியை வாங்கிக் சென்ற பிரம்மராட்சதன் அதை நேராக்க முயன்றான். அடுத்தாற்போல் உள்ள ஓர் அரசமரத்தின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டான். தன் தொடையின் மேல் அந்த மயிரை வைத்துத் திரித்துப் பார்த்தான். எப்படித் திரித்தாலும் அந்த மயிர் வளைந்துகொண்டேதான் இருந்தது. சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் விழித்தான். பொற்கம்பி களையும், வெள்ளிக்கம்பிகளையும் நேர் செய்வதற்காகத் தட்டார்கள், அவற்றை உலையில் வைத்து ஊதுவது நினைவிற்கு வந்தது. அப்படிச் செய்தால் இந்த மயிர் ஏன் நேராக நிற்காது என எண்ணியதும் மனம் மகிழ்ந்தான். பின்னர் அந்த மயிரை ஒரு தட்டார் உலையில் வைத்து ஊதிப்பார்த்தான். நெருப்புப்பட்டதும் மயிர் 'புஸ்' என்று பொசுங்கிப் போயிற்று. கொடுத்த வேலையைச் சரிவரச் செய்து முடிக்காமல் தன் எஜமானியிடம் செல்ல அஞ்சிய அவன் எங்கேயோ ஓடி மறைந்துவிட்டான்.வெகுநேரம் இராட்சஷன் வராமல் போகவே உலுத்தன் மனைவி மகிழ்ச்சி அடைந்தாள்.''நான் மூன்றுமாதம் பூஜை செய்து மந்திரம் உருப்போட்டு வரவழைத்த பேயை நீ ஒரே நொடியில் விரட்டிவிட்டாயே உன் திறமையே திறமை!'' எனத் தன் மனைவியை புகழ்ந்தான் உலுத்தன்.அவன் மனைவி, ''புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி கண்ட மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை...'' என்று பாட்டுப்பாட, அவர்கள் இருவரும் மனம் மகிழ்ந்தபடி நிம்மதியாகத் தங்கள் சீர் செய்யப் பெற்ற நிலங்களைப் பராமரித்து நீண்டகாலம் இன்பமாக வாழ்ந்து வந்தனர்.(முற்றும்)