தீ!
வடஆற்காடு மாவட்டம், அரக்கோணத்திற்கு அருகில், 1973ல் ஆசிரியராக பணியாற்றிய போது நடந்த சம்பவம்! ஆணைப்பாக்கம் என்ற மிகச்சிறிய கிராமம். இரண்டு ஆசிரியர் பள்ளி. ஊருக்கு வெளியே, கூரைக் கட்டடம் தான் பள்ளி. ஓட்டு வீடு அங்கு இல்லை; பகல், 11:00 மணிக்கு, ஒரு வீட்டில் நெருப்பு பிடித்து விட்டது. சமையல் செய்த அடுப்பை நன்றாக அணைக்காமல், தொட்டிலில் துாங்கும் குழந்தையை, அப்படியே விட்டு விட்டு, கடைக்குச் சென்று விட்டார் தாய். காற்றில் நெருப்பு பறந்து, வீடு, தீப்பிடித்து விட்டது.ஊர் மக்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தனர்; குழந்தையை காப்பாற்ற, யாரும் முன் வரவில்லை; தண்ணீர் வசதியும் பக்கத்தில் இல்லை. பள்ளியிலிருந்து பிள்ளைகள் ஓடி வரும் போது, நானும் கூட ஓடி வந்தேன். பக்கத்தில் கிடந்த ஒரு கந்தல் சாக்கை போர்த்தி, வீட்டுக்குள் ஓடி, கயிறு அறுந்து விழும் நிலையில், தொட்டிலில் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு வந்தேன்.குழந்தைக்கு, யாதொரு புண்ணும் இல்லை; எனக்கு தான், சில இடங்களில் தீப்புண். அந்த புண்களின் தழும்பு, இப்போதும் இருக்கிறது. தற்போது, என் வயது, 70. ஊர் மக்கள் பாராட்டி, கூட்டம் போட்டு, ஒரு சவரனில் மோதிரம் போட்டனர். அப்போது, ஒரு சவரன், 420 ரூபாய். அந்த வீர தழும்புகளுக்கு, இன்றும் கேட்பவர்களிடம் விளக்கம் சொல்கிறேன்!- ஜி.மைக்கேல், சாத்துார்.