உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (6)

அன்புள்ள சகோதரி மெடோஸ்...நான் இல்லத்தரசி; கணவர், தனியார் நிறுவனத்தில், கிளார்க்காக பணிபுரிகிறார். சென்னையில், வாடகை வீட்டில் குடியிருக்கிறோம். எங்களுக்கு, இரு குழந்தைகள்; மூத்தவளுக்கு, 10 வயது; 5ம் வகுப்பு படிக்கிறாள். இளையவனுக்கு, 8 வயது; 3ம் வகுப்பு படிக்கிறான். நாங்கள் தான் சரியாக படிக்கவில்லை; குழந்தைகளாவது நன்கு படித்து, பெரிய வேலைகளுக்கு போக வேண்டும் என்பது எங்கள் ஆசை!பள்ளி முடிந்து, மாலை, 5:00 மணிக்கு, குழந்தைகள் திரும்புவர்; நொறுக்கு தீனி தின்பர். மாலை, 6:00 மணிக்கு, 'டிவி' முன் உட்கார்ந்தால், இரவு, 10:00 மணிக்கு தான் எழுந்திருப்பர். இடைப்பட்ட, நான்கு மணி நேரத்தில், வெவ்வேறு சேனல்களில், எட்டு, 'டிவி' தொடர்களை பார்ப்பர்.இரவு, 10:00 மணிக்கும் வேண்டா வெறுப்பாய் தான் எழுவர்; எப்போதும், 'டிவி' சீரியல் கதாபாத்திரங்கள் பற்றி தான் பேசுவர்.'அவளை, ஆள் வெச்சு அடிச்சது பத்தாது, கொன்னுருக்கணும்; அந்த கதாபாத்திரத்துல வர மூஞ்சியே நல்லால்ல; கதாநாயகனுக்கு கொஞ்சம் கூட, நடிக்க தெரியல; சீரியல்கள்ல வர்ற எல்லாரும், ஏன்ப்பா தாடி வெச்சுருக்காங்க...'- இப்படித்தான் குழந்தைகள் பேசிக் கொள்கின்றனர்.'தினமும், ஒரு மணி நேரம் சீரியல் பாருங்க; ரெண்டு மணி நேரம் படிங்க, வீட்டுப் பாடம் செய்யுங்க; சாப்பிட்டு, இரவு, 9:00 மணிக்கெல்லாம் படுத்துடுங்க...' என்று கெஞ்சி பார்த்து விட்டேன்.'வாயை மூடும்மா... எங்களையும், அப்பாவையும், காலைல, 9:00 மணிக்குள், 'பார்சல்' செய்து அனுப்பிச்சுட்டு, சாயந்தரம், 5:00 மணி வரைக்கும், விடாம சீரியல் பாக்குற; அதோட விடுறியா... நாங்க உக்காந்து பாக்கறப்ப, நீயும் திருட்டுத்தனமா பாக்குற...'ஒரு நாளைக்கு, 12 மணி நேரம் பாக்குற நீ, எங்களை குறை சொல்ல வந்துட்டியா... பள்ளிக்கூடத்துக்கு போகாம, உன் கூட உக்காந்தா சீரியல் பாக்குறோம். எங்களுக்கு, பொழுதுபோக்கு வேணாமா... சீரியல் பாக்குறது, எங்க பிறப்புரிமை...' என்று சொல்கின்றனர்.என் குழந்தைகளின் சீரியல் கிறுக்கை போக்க, தகுந்த வழி சொல்லுடியம்மா...அன்புள்ள அக்காவுக்கு...உன் குடும்பம், 'சீரியல்மேனியாவால்' அவதிப்படுவது கண்டு வேதனைப் படுகிறேன்; தமிழகத்தில், 90 சதவீதம் குடும்பங்களில், இதே பிரச்னை தான்.குடிப் பழக்கம், புகை பழக்கம் போல, 'டிவி' சீரியல் பார்ப்பதும், உடலுக்கும், மனதுக்கும் ஆபத்தானது; கேடு விளைவிப்பது. ஒருமுறை பார்த்தால், ஆயுளுக்கும் தொடரும்; சீரியல் பார்ப்பதற்கு, உடல் உழைப்போ, சிந்தனை திறனோ தேவையேயில்லை; மூளையை கழற்றி வைத்து விட்டு பார்க்கலாம். பிறர் மீது பொறாமைப்படுவது எப்படி, பிறர் குடும்பத்தை கெடுப்பது எப்படி, நம்பிக்கை துரோகம் செய்வது எப்படி என, வாழ்க்கையின் சகல கெட்ட குணங்களையும், 'டிவி' சீரியல்கள் கற்றுத் தருகின்றன.பெற்றோரிடமிருந்து தான், குழந்தைகளுக்கும் சீரியல் பார்க்கும் பழக்கம் தொற்றுகிறது. எனவே, குழந்தைகளை, குற்றம் சாட்ட நமக்கு யோக்கியதை உண்டா என்பதை, சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம்; அதே செயலை, குழந்தைகளை, செய்யாதே என, கட்டளையிடுகிறோம்; இது அறிவீனம். அக்கா... போர்க்கால அவசரமாய், கீழ்கண்டவற்றை செய்யுங்கள்...'டிவி' தொடர்பை, அறவே துண்டித்து விடுங்கள் அல்லது சீரியல்களை ஒளிபரப்பும், அனைத்து சேனல்களையும், உங்கள் விருப்ப பட்டியலிருந்து அகற்றுங்கள். சீரியல் பார்க்காமல், சில நாட்கள், கை, கால்கள் நடுங்கும். இதை மனம் ஏற்பதற்கு, மூன்று மாதங்கள் வரை ஆகும்.'கேடு தரும் ஒன்றை நீங்களும் பார்க்க வேண்டாம்; நானும் பார்க்க வேண்டாம் என, முடிவெடுத்து விட்டேன்...' என்பதை குழந்தைகளிடம் கூறுங்கள்.பள்ளியிலிருந்து திரும்பியவுடன், ஒரு மணி நேரம் விளையாட சொல்லுங்கள்; நொறுக்கு தீனியாக, தேங்காய் துருவல் கலந்த சுண்டலை கொடுங்கள். இரண்டு மணி நேரம் பள்ளியில் நடத்தியதை படித்து, வீட்டுப்பாடம் செய்யட்டும். அந்த நேரத்தில், அவர்களுடனேயே இருங்கள்; ஏறக்குறைய, அவர்களது பாடத்தை நீங்களும் படித்து, வீட்டுப்பாடத்தை, நீங்களும் செய்தது போல, பாவனை ஏற்படட்டும்.தமிழ் செய்தித்தாள் ஒன்றை, தினமும் வீட்டில் போட சொல்லுங்கள்; மாத பட்ஜெட்டில், 180 ரூபாய் அதிகரிக்கும். செய்திதாளை நீங்களும் வாசித்து, குழந்தைகளுக்கும் வாசிக்க கொடுங்கள்; பகல் பொழுதில், தையல் வேலை செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.சீரியல்கள் இல்லா உலகத்தை உருவாக்குவோம் அக்கா!- அன்புடன், மெடோஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !