இளஸ் மனஸ்! (57)
அன்புள்ள பிளாரன்ஸ்...பல்பொருள் அங்காடியில் பணிபுரியும், 30 வயது பெண் நான். சென்னை புறநகர் பகுதியில் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் எட்டு வீடுகள் மட்டுமே உள்ளன. அருகே சுடுகாடு ஒன்றும் உள்ளது. கணவர் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். ஒரே மகள், 5ம் வகுப்பு படிக்கிறாள். மகள் நடத்தையில், ஒரு வருடமாகவே வினோதம் தெரிகிறது. ஒருநாள், 'அம்மா! நேத்து ராத்திரி பெட்ரூம்ல, ஒரு பேயை பாத்தேன்!' என, ஓர் உருவத்தை வரைந்து காட்டினாள். மற்றொரு நாள், 'பேயை, வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் மரத்துல பாத்தேன்!' என, இன்னொரு கொடூர உருவத்தை வரைந்து காட்டினாள். இதுவரை, பத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்டி விட்டாள். அவை எல்லாம் கற்பனையாக தெரியவில்லை. 'அச்சு அசலாய், நேரில் பார்த்த உருவங்களை வரைந்திருக்கிறாளோ' என, சந்தேகம் வருகிறது. மேற்கொண்டு என்ன செய்யலாம் என தெரியவில்லை. ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் உன் பதிலுக்காய் காத்திருக்கிறேன்.அன்புமிக்க அம்மா,மகளின் கற்பனைக்கும், ஓவியத் திறமைக்கும் வாழ்த்துக்கள். மரணத்துக்கு பின், மனிதன் என்ன ஆகிறான் என்பது, மில்லியன் டாலர் கேள்வி. மறுபிறவி எடுப்பதாக சில மதங்கள் நம்புகின்றன. கடவுளின் இறுதி தீர்ப்புக்காக, மனித உயிர்கள் காத்திருப்பதாக சில மதங்கள் நம்புகின்றன. இளவயதில் இறந்தோர், துர்மரணமடைந்தோர், ஆசைகள் நிறைவேறாமல் இறந்தோர் எல்லாம் ஆவியாக சுத்துவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. 'ப்யூஸ்' போய் விட்டால், ஒரு மின்சார பல்பை என்ன பண்ணுவோம். குப்பையில் துாக்கி எறிவோம். பல்பின் ஆவி, சுற்றிக் கொண்டிருப்பதாக யாராவது கூறினால் நம்புவோமா... ஒரு மனிதன் இறந்து விட்டால், அவனது வாழ்க்கை அனுபவங்கள், ஆசாபாசங்கள் முற்று பெற்று விடுவதாக நாத்திகம் பேசுவோர் கூறுகின்றனர். தானாக தோன்றி தானாக மறைகிறது, உயிர். மரணத்திற்கு பின், தனியாக வாழாது என, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மகள், கைக்குழந்தையாய் இருந்த போதே பேய் பயத்துடன் வளர்த்திரும்பாள். ஏராளமான பேய் படங்களையும் பார்த்திருப்பாள்; பேய் கதைகளையும் படித்திருப்பாள். சிலருக்கு கற்பனா சக்தி அளவாக இருக்கும்; சிலருக்கு அதீதமாக இருக்கும். மகளுக்கு, கதை எழுத்தாளர்களை தாண்டிய கற்பனை. கற்பனையில் கண்ட உருவங்களை ஓவியத் திறமையால் வரைந்து தள்ளுகிறாள். அவளுக்கு, 'பாஸ்மோபோபியா' என்ற மனநோய் இருக்க வாய்ப்பிருக்கிறது.என்ன செய்யேவண்டும் தெரியுமா...* மகள், கண்ட, கண்ட சினிமாக்கள் பார்ப்பதை தடுத்து நிறுத்தவும் * அவளை தனிமையில் இருக்க விடாதீங்க. உடன் படுக்க வைக்கவும் * இரவுகள் ஆவிக்கானது அல்ல; பூமி தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. இரவு, பகல் என்பது இயற்கையின் ஏற்பாடு. சூரியனின் வெளிச்சப் பக்கம் இருக்கும் பூமிக்கு பகல்; வெளிச்சம் படாத பூமிக்கு இரவு. நேற்றைய மனிதர்களை தான் ஆவிகளாக கருதி பயப்படுகிறோம். நாளை நமக்கும் மரணம் உண்டு என்பதை தெளிவுபடுத்தவும் * ஆவிகள் உண்மையில் இருந்தால், பவுதீக உடம்பு இருக்காது. வெளிச்ச வடிவில் காற்றாய் இருக்கும். பேசவோ, நன்மை, தீமை செய்யவோ முடியாது. இதை மகளுக்கு விளக்கி அறிவுரைக்கவும்* மகளின் ஓவியத் திறமையை நல்ல செயல்களுக்கு மடைமாற்றவும்* மனநல ஆலோசகரிடம் கூட்டி சென்று தகுந்த ஆலோசனை கொடுக்கவும்* வீட்டின் இருட்டான பக்கங்களில் விளக்கு பொருத்தி வெளிச்சமாக்கவும்* வீட்டின் அருகிலிருக்கும் மரத்தின் கிளைகளை கத்தரித்து அடர்த்தியை குறைக்கவும்* கண்மருத்துவரிடம் கூட்டி சென்று பார்வையை சோதிக்கவும்.தன்னம்பிக்கை மிக்கதாக வாழ்க்கையை அமைக்க உதவவும்; எது வந்தாலும் முட்டி மோதி வெற்றி பெறும் அக்கினிக்குஞ்சாக, மகளை வளருங்கள் அம்மா.- பிராத்தனைகளுடன், பிளாரன்ஸ்