பரம்பரை!
முன்னொரு காலத்தில் ராஜ மகேந்திரபுரம் என்ற சிற்றூரில் பொய்யாமொழி என்ற புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒருமுறை வெளியூருக்குச் சென்று பாடிப் பரிசுகள் பெற்றார். தன் ஊருக்குத் திரும்ப எண்ணினார். எனவே, ஒரு வண்டியை வாடகைக்குப் பேசினார்.வண்டிக்காரன், ''இரண்டு ரூபாய் வாடகை தர வேண்டும் என்று கூறினான். அத்துடன் பகல் உணவும் வேண்டும்,'' என்று கூறினான்.புலவரும் அதற்கு சம்மதித்தார்.ஆனால், ''உணவை ஊர் போய்ச் சேர்ந்த வுடன் தருகிறேன், வாடகை அரை ரூபாய் குறைத்துக் கொள்ளக் கூடாதா?'' என்று கேட்டார் புலவர்.வண்டிக்காரன் சம்மதிக்கவில்லை.''தூரம் அதிகம். வேறு வண்டிக்காரனாக இருந்தால் மூன்று ரூபாய் கேட்டிருப்பான்,'' என்று கூறினான்.வண்டி ஓட்டியும், புலவரும் வெகு நேரம் பேசினர். கடைசியாகப் புலவர் ஒரு வழியாக அவன் பேசிய கூலிக்கே ஒப்புக் கொண்டார்.வண்டிக்காரன் அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டான். அவர்கள் போகும்போது பேசிக்கொண்டே சென்றனர். அப்போது வண்டிக்காரன் புலவரைப் பற்றி விசாரித்தான்.புலவர், ''தன்னுடைய பெயர் பொய்யாமொழி என்றும், தான் ஒரு புலவர் என்றும், தன்னுடைய தகப்பனும், தகப்பனின் தகப்பனும் கூடப் புலவர்கள் தான் என்றும், வழி வழியாகப் புலவர்களாக இருந்து பணக்காரர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவது தங்கள் குல வழக்கம்,'' என்று புலவர் தெரிவித்தார்.''அது மட்டுமல்லாமல் தன்னுடைய தாத்தா அக்காலத்தில், புலவர்களுக்கெல்லாம் புலவராக இருந்தார் என்றும் கவிதை மழை பொழிவதில் வல்லவர் என்றும், அவர் கூறினார். மேலும், பெருமிதத்துடன் அவர் கூறினார்.''என்னுடைய தாத்தா கவிஞராக இருந்த காலத்தில், ஒரு மிகப்பெரிய கொடை வள்ளல் ஒருவர் இருந்தார். அவர் பெயர் வெங்காளப்ப நாயக்கர். அவர்தான் தாத்தாவின் அறிவாற்றல் கண்டு, அந்த ராஜ மகேந்திரபுரம் என்னும் சிற்றூரை மானியமாக என் தாத்தாவுக்குத் தந்தார்.''அந்த ஊரை வைத்துக் கொண்டுதான் நாங்களும், எங்களுடைய சந்ததியினரும், இன்று வரை வாழ்ந்து வருகிறோம். வெங்காளப்ப நாயக்கரின் வள்ளல் தன்மையைப் போல வள்ளல் தன்மை இதுவரை எவருக்கும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.''நான் சிறு பிள்ளையாக இருந்த காலத்திலேயே வெங்காளப்ப நாயக்கர் இறந்து போனார். ஆனால், அவர் தந்த கிராமம் இன்றுவரை அவரை நினைக்க வைக்கிறது. அவருடைய சந்ததிகள் எல்லாம் நீண்ட காலம் வாழ வேண்டும், என்று நாங்கள் அவ்வப்போது பிரார்த்தனை செய்வோம்!'' என்றார்.வண்டிக்காரன் இதை எல்லாம் ஆச்சர்யத்துடன் அமைதியாகக் கேட்டுக் கொண்டே வந்தான். ஒரு வழியாகப் புலவரின் ஊர் வந்து சேர்ந்தது. அவரை அவர் வீட்டிலேயே பத்திரமாகச் சேர்த்தான் வண்டி ஓட்டி.புலவர் வண்டியை விட்டுக் கீழிறங்கினார். பேசியபடியே இரண்டு ரூபாய் தந்தார். உணவு உண்ண அழைத்தார்.வண்டிக்காரன் அந்தப் பணத்தை வாங்கவில்லை; உணவும் உண்ணவில்லை.''வேண்டாம் ஐயா!'' என்று பணிவுடன் கூறி விட்டு, வண்டியைத் திருப்பத் துவங்கினான். புலவர் ஆச்சர்யம் அடைந்தார்.''ஏன் வேண்டாம் என்கிறாய். நீ கேட்ட கூலியைத் தான் நான் ஒப்புக் கொண்டு தருகிறேனே! வாங்குவதில் என்ன தயக்கம்? களைப்பாக இருக்கிறாய்... <உணவு உண்ணவும் மறுக்கிறாய்... காரணம் என்ன?'' என்று அவர் கேட்டார்.வண்டிக்காரன் அமைதியான குரலில் கூறினான்.''உங்கள் மேல் எத்தவறும் இல்லை! நான் கேட்ட கூலியைத் தான் நீங்கள் தரமுன் வந்தீர்கள். அப்போது நீங்கள் பயணி. ஆகவே, உங்களிடம் கேட்க எனக்கு உரிமை இருந்தது. கேட்டேன். இப்போது அப்படி இல்லை!''''ஏன்?'' என்றார் புலவர்.''நீங்கள் இதுவரை எந்த வெங்காளப்ப நாயக்கரைப் பற்றிப் புகழ்ந்து கொண்டே வந்தீர்களோ, அந்த வெங்காளப்ப நாயக்கரின் பேரன்தான் நான்!''என் தாத்தா சன்மானமாக அளித்த கிராமத்தில் வாழ்கிறீர்கள். அவருடைய சன்மானத்தால் சுகவாழ்வு வாழ்வதாகச் சொன்னீர்கள். அந்தப் பணத்திலிருந்து என் பணத்தைப் பெற விரும்பவில்லை. என் தாத்தாவால் அளிக்கப்பட்டதைத் திரும்பப் பெற்றால், என் தாத்தாவின் கொடைத் தன்மையை அவமதித்தது போலாகிவிடும். எனவேதான், வாங்கவில்லை?'' என்று கூறிக்கொண்டே வண்டியை ஓட்டிச் சென்றான்.***