உள்ளூர் செய்திகள்

பிணமே பேசாம படுத்திரு...

திருச்சி, பாலக்கரை, செயின்ட் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1966ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...நல்ல குரல்வளமும், தெளிவான தமிழ் உச்சரிப்பு திறனும் இருந்ததால், பள்ளி நாடகங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்து வந்தேன். அந்த ஆண்டு, சாம்ராட் அசோகனாக நடித்தேன். கலிங்கப்போரில் வென்றதும், போர்க்களத்தில் மாண்டு கிடக்கும் பல்லாயிரம் உடல்களுக்கு மத்தியில் நின்று, வசனம் பேசும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். போரில் மாண்டவர்களாக நடிக்க, சில மாணவியரை மேடையில் படுக்க வைத்திருந்தனர்.அவர்களுக்கு நடுவே, உருக்கமாக பேசியபடியே உலாவிக் கொண்டிருந்தேன். எதிர்பாராமல் ஒருத்தியின் காலை மிதித்துவிட்டேன். வலியால் புரண்டவள் எழுந்து, 'ஏன்டி இப்படி மிதிச்ச... வலியால் உயிர் போகுது...' என கத்தினாள். மேடை பின்புறமிருந்த தமிழாசிரியை செல்வி ஜோஸ்பின், 'ஏ பொண்ணே... நீ இப்போ பொணம்; பேசாம படுத்திரு...' என, அதட்டினார். நாடகத்துக்கு பொருந்தாத வசனங்களை கேட்டதும், அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது.சிறப்பான நாடகம், 'சிரிப்பு' நாடகமாக முடிந்தது. அந்த நிகழ்வை இப்போதும் என் மகளிடம் சொல்லி மகிழ்கிறேன்.- சுந்தரி துரை, கோவை.தொடர்புக்கு: 98946 40059


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !