உள்ளூர் செய்திகள்

பாதை தேடி...

சிவகங்கை மாவட்டம், பள்ளத்துார், சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லுாரியில், 2002ல் விலங்கியல் இளங்கலை, 2ம் ஆண்டு படித்தபோது நடந்த சம்பவம்... பேராசிரியை ஸ்ரீவள்ளி தமிழ் பாடத்தை நயமாக போதித்து, கண் முன் நிறுத்துவார். சிலப்பதிகாரம் கதையில், பூம்புகாரிலிருந்து, கண்ணகியை மதுரை அழைத்து வருவான் கோவலன். வழி எங்கும் சிவப்பு நிற கற்கள் நிறைந்திருக்கும். அதில் நடந்து அவள் பாதங்கள் புண்ணாவதை, 'கற்கள் போலவே கன்னி பாதங்கள் சிவந்துள்ளன...' என்று குறிப்பிட்டிருப்பார் இளங்கோவடிகள்.அவ்வகை கற்கள், எங்கள் வட்டார ஊரணிகளில் அதிகம் காணப்படுகிறது. அதை முன் வைத்து, 'பூம்புகாரில் புறப்பட்டு பள்ளத்துார், காரைக்குடி வழியாகத்தான், கண்ணகியை மதுரை அழைத்து சென்றிருக்க வேண்டும். அவர்கள் நடந்த பாதையில் வாழ்கிறோம்...' என கூறி ஆர்வமூட்டினார், பேராசிரியை.எனக்கு, 38 வயதாகிறது; மதுரை ரயில்வே பள்ளியில், முதுகலை உயிரியல் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதைக்களத்தில், வந்தியதேவன் பயணித்ததாக கூறும் பாதையை தேடி செல்வோர் பலரை இன்று காண்கிறேன். அதுபோல், சிலப்பதிகார நாயகி நடந்த பாதையை, பல ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டி கற்பித்தார் அந்த பேராசிரியை. அவரது வகுப்பில் இருந்த நாட்கள் பொற்காலம் போல் நினைவில் பதிந்துள்ளன. அவரது அடியொற்றி பாடத்தோடு தொடர்புள்ள சுவாரசியங்களை வகுப்பறையில் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்!- கரு.வைஜெயந்திமாலா, விருதுநகர்.தொடர்புக்கு: 99949 39477


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !