தத்துவக் கதை!
ஒருமுறை ஒரு ஓவியர் ஓவியம் வரைவதில் ஈடுபட்டிருந்தார். அப்போதெல்லாம் கையினால் செய்த காகிதத்தையே பயன்படுத்தினர். காகிதம் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும். அந்தக் காகித்தில் ஓவியம் வரையும்போது தங்குதடையில்லாமல் வரைய வேண்டும். ஏதாவதொரு இடத்தில் சற்று தேங்கினாலும் போதும், பேனா மசி சுற்றிலும் பரவி வடிவ அமைப்பையே கெடுத்து விடும்.குரு ஓவியம் வரையும்போது அவருடைய பிரதான சீடன் அருகில் அமர்ந்திருந்தான். அவர் வரைய முற்பட்ட ஓவியம் ஏனோ குளறுபடியாகிக் கொண்டேயிருந்தது. காகிதங்களும் மசியும் மட்டுமல்ல; நேரமும் அதனால் விரயமானது. குரு திரும்பத் திரும்ப முயன்றும் தோற்றார். அதன்பிறகு தனது சீடனிடம் சொன்னார். ''மசி தீர்ந்து போச்சு நீ போய் மசி தயாரித்து கொண்டு வா,'' என்றார்.உண்மையில், இன்னும் சில ஓவியங்கள் வரையும் அளவிற்கு புட்டியில் மசி இருந்தது. அவனை அங்கிருந்த அனுப்பவே அந்தத் தந்திரம் செய்தார்.அதற்குக் காரணம் உண்டு. ஓவியக் கோடுகளை அவர் வரையும்போது, அது சரியில்லை, இது சரிப்படாது, என்று குறை பேசிக் கொண்டிருந்தான். அவனில்லாதபோது அவரால் எளிதாக வரைய முடிந்தது. அவன் மசியுடன் வருவதற்குள் அவர் வரைந்து முடித்து விட்டார். ஓவியம் நேர்த்தியாக வந்திருந்தது.''குருவே, இது சரியா வந்திருக்கு! இவ்வளவு நேரம் வரைவதற்கு எவ்ளோ கஷ்டப்பட்டீங்க... இப்ப மட்டும் எப்படி?'' சீடன் வியந்தான்.''உன்னுடைய இருப்பை நான் உணர்ந்தபடி இருந்தேன். பாராட்டவோ, குறை சொல்லவோ பக்கத்தில் ஒருவர் இருக்கிறார் என்கிற நினைப்பே என்னுடைய வேலையைக் கெடுத்தது. நீ வெளியில் சென்றபின் அமைதியாகவும் எளிதாகவும் அதைச் செய்து முடித்தேன்.'' என்றார்.***