அரிய வகை பழங்கள்!
ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரம் பழங்கள். இவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், இதய நோய், அழற்சி மற்றும் சர்க்கரை நோய் வரும் அபாயம் குறையும். கனிம சத்துகள், வைட்டமின் மற்றும் நார்சத்து உடலுக்கு கிடைக்கும். பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்களுக்கு, நோய் தடுப்பு சக்தி அதிகம் உள்ளதாக நம்பப்படுகிறது.உலகில் அந்தந்த பருவ காலங்களுக்கு ஏற்ப பழங்கள், குறிப்பிட்ட பகுதிகளில் விளைகின்றன. நம் நாட்டில் வட்டார ரீதியாக விளையும் சில அரிய வகை கனிகளைப் பார்ப்போம்...களாக்காய்!பீஹார், மேற்கு வங்கம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் பழம் சிறிதாக இருக்கும். புளிப்பு சுவையை கொண்டிருக்கும். இதன் காயை, உப்பு தொட்டு சாப்பிடலாம். முழுமையாக பழுத்தவுடன், மென்மையான இனிப்பு சுவையுடன் இருக்கும்; இதில், சாஸ், ஊறுகாய் தயாரிக்கலாம்.தடச்சி!இது பல்சா என்றும் அழைக்கப்படுகிறது. முதன்முதலில், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் காணப்பட்டது. புத்த அறிஞர்களால் ஆசிய நாடுகள் பலவற்றுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையை கொண்டிருக்கும். கோடையில் சந்தையில் விற்கப்படும். பழக்கூழில் சர்பத் மற்றும் ஸ்குவாஷ் தயாரிக்கலாம். உடலை குளிரூட்ட பயன்படும்.மங்குஸ்தான்!மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கன்னியாகுமரி, கேரளாவில் அதிகம் வளர்க்கப் படுகிறது; வெப்ப மண்டலத்தில் நன்கு வளரும். பழம் நல்ல மணம் கொண்டது. சிறிய ஆரஞ்சு அளவில் இருக்கும்; இதன் தோல் ஊதா - மெரூன் நிறத்தையும், வெள்ளை நிற சதைப்பற்றுள்ள உட்புறத்தையும் கொண்டது; சுவையால் மாம்பழம் போன்று இருக்கும். இது, ஆசிய நாடான தாய்லாந்தின் தேசிய பழம். லங்சாட் பழம்!நீலகிரி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிகம் பயிரிடப்படுகிறது; சிறிய, ஒளி ஊடுருவக் கூடிய உருண்டை வடிவத்தில் பழம் இருக்கும்; பழுக்காத போது புளிப்புச் சுவையுடன் இருக்கும். பழுத்த பின் இனிப்பு சுவை நிறைந்திருக்கும்.நட்சத்திர பழம்!இது விளம்பிப் பழம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா முழுதும் குறிப்பாக, தெற்கு பகுதியில் அதிகம் விளைகிறது. மெழுகு போன்ற தோல் உடையது; இதன் காய் பச்சை நிறத்தில், புளிப்பு சுவையுடன் இருக்கும்; பழுத்தது, மஞ்சள் நிறத்தில் பழுப்பு நிற நரம்புகளைக் கொண்டிருக்கும்.இது போன்ற பழங்களை, அவை கிடைக்கும் போது உண்டு, நலமுடன் வாழ்வோம்.