உள்ளூர் செய்திகள்

நீல வளைய ஆக்டோபஸ்!

கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் சிறிய உயிரினங்களில் ஒன்று, நீல வளைய ஆக்டோபஸ். மிகவும் அழகானது; அதே நேரம் ஆபத்தானது. இந்த ஆக்டோபஸ், இந்திய- பசிபிக் பெருங்கடல் பகுதிகளில், குறிப்பாக ஆஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் கடற்பகுதிகளில் வாழ்கிறது. இவை, பவளப்பாறைகளுக்கு இடையே, மறைந்து வசிக்கும் இயல்புடையவை. சிறு மீன்கள், நண்டுகள் போன்றவற்றை உணவாகக் கொள்ளும். நீல வளைய ஆக்டோபஸ், 12 முதல் 20 செ.மீ., அளவில் தான் இருக்கும். இதன் விஷம், மிகவும் கொடியது. விஷத்திலுள்ள 'டெட்ரோடோடாக்சின்' எனும் நச்சுப் பொருள், ஒரே கடியின் மூலம், 26 வயது திடகார்த்திரமான இளம் வாலிபனை கூட, நிமிடங்களில் கொன்றுவிடும் திறன் கொண்டது. இதன் உடலில் உள்ள நீல நிற வளையங்கள், ஆபத்தை உணரும் போது பிரகாசமாக ஒளிரும். இது, ஒரு எச்சரிக்கை அடையாளம். இந்த வளையங்கள், சாதாரண நிலையில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இது கடலின் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்று. சூழலுக்கேற்ப உருமாற்றம் செய்து தப்பிக்கும் திறன் கொண்டது. தாக்குதலின் போது மட்டுமே, கடும் விஷத்தை வெளிவிடும். மற்றபடி இது அமைதியான உயிரினம் தான். நீல வளைய ஆக்டோபஸின் விஷம், அது கடித்தவுடன், எதிராளியின் நரம்பு மண்டலத்தை முடக்கி, மூச்சுத்திணறலை ஏற்படுத்தி சாகடித்துவிடும். இதன் விஷம் மனிதர்களையும் மரணிக்க செய்துவிடும் என்பதால், அதைக் காண நேரும் போது, தொடாமல் இருப்பது நல்லது. இதன் ஆயுட்காலம், ஓராண்டு மட்டுமே. இனப்பெருக்கத்தின் போது, பெண் ஆக்டோபஸ் எதையும் உண்ணாமல், முட்டைகளைக் காத்து, அவை பொரிந்ததும் இறந்துவிடும். அழகும், ஆபத்தும் கலந்த நீல வளைய ஆக்டோபஸ் மறைத்து வைத்துள்ள அதிசயமும், கொடூரமும், உலக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்துள்ளது. - நர்மதா விஜயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !