போன்சாய் மரம்!
இயற்கையில் பெரிதாக வளரும் மரங்களை திறமையாக கத்தரித்து பொம்மை போல் காட்சிப்படுத்துவதே போன்சாய் எனப்படுகிறது. கிழக்காசிய நாடான ஜப்பானிய மொழியில், 'போன்' என்ற சொல் பானையை குறிக்கும். நடவு செய்வதை, 'சாய்' என்ற சொல் குறிப்பிடுகிறது. ஆசிய நாடான சீனாவில், 'பென்ஜிங்' என்ற பெயரில் துவங்கியது இந்த குட்டை மரம் வளர்க்கும் கலை. சீனாவில், டாங் வம்ச ஆட்சி காலத்தில் பென்ஜிங் கலை உருவானது. சிறிய பானைகளில் மரங்களை வளர்த்து காட்சிப் படுத்துவதே இதன் நோக்கம். இயற்கையின் அழகு அதில் பிரதிபலித்தது. அமைதி மற்றும் எளிமையைப் போற்றும் வகையில் அமைந்திருந்தது. ஜப்பானில், கி.பி., 12ம் நுாற்றாண்டில் பரவியது இந்த கலை. அப்போது சமூகத்தில் கவுரவம் பெற்றிருந்த சாமுராய் மற்றும் பிரபுக்கள், இந்த கலையை உயர்வாக கருதி ஆர்வமுடன் ஈடுபட்டனர். இதை முறைப்படுத்தியதால் புதிய பாணிகள் உருவாயின. பல வடிவங்கள் எடுத்தன. இந்த கலை, 17ம் நுாற்றாண்டில் மக்களிடையே பிரபலமடைந்தது. இதற்காக சிறப்பு கருவிகள் உருவாக்கப்பட்டன. நுட்பங்களுடன் மிளரத் துவங்கியது. பின் 19ம் நுாற்றாண்டில் உலகின் பிற நாடுகளுக்கு அறிமுகமானது. பல கலாசாரங்களிலும், தனித்துவமான பாணிகள் உருவாக்கப்பட்டன. இப்போது, போன்சாய் மரம் வளர்ப்பு உலகம் முழுதும் பரவியுள்ளது. மக்களின் முக்கிய பொழுது போக்குகளில் ஒன்றாகி உள்ளது. ஒவ்வொரு போன்சாய் மரமும், அதை வளர்ப்பவரின் படைப்பாற்றலையும், அழகியலையும் வெளிப்படுத்துகிறது. - வி.பரணிதா