இளஸ் மனஸ்! (324)
அன்புள்ள பிளாரன்ஸ்... எனக்கு, 38 வயதாகிறது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு, 17 வயதாகிறது. இரண்டாம் மகளுக்கு, 15; மூன்றாம் மகளுக்கு, 13 வயது ஆகிறது. இளைய மகள்கள் இருவரும் சரியான வயதில் பருவமெய்தி விட்டனர். மாதா மாதம் முறையாக ஒதுங்கவும் செய்கின்றனர். மூத்த மகள் பிரபல பள்ளி ஒன்றில், பிளஸ் 2 படிக்கிறாள். அவளுக்கு, 17 வயதாகிறது. இன்னும் பூப்பெய்தவில்லை. உடல் வளர்ச்சியின்றி, மெலிந்து காணப்படுகிறாள். இது பெரும் மனக்குறையை ஏற்படுத்தியுள்ளது. தினம் தினம் வருந்தியபடி இருக்கிறாள். எனக்கும் இது பெரும் பாரமாக இருக்கிறது. உறவினர், அக்கம் பக்கத்தவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கின்றனர். தாங்க முடியாத வேதனையால் தவிக்கிறோம். மருத்துவர்களிடம் அழைத்து சென்றேன். பரிசோதித்து உடல் வளர்ச்சிக்கு டானிக், மாத்திரைகள் கொடுத்தனர். அதனால் பலன் ஏதும் ஏற்படவில்லை. இந்த மனக்குறை பாதிப்பால், படிப்பிலும் கவனமின்றி தேர்வுகளில் மகள் பெயிலாகிறாள். என் மன வேதனை தீரவும், மகள் குறையை போக்கவும் பரிகாரமுண்டா... மற்ற பெண்களை போல, என் மகள் வாழ்க்கை அமைய வழியுண்டா... நல்ல பதில் தந்து ஆறுதல் படுத்துங்கள். இப்படிக்கு, என்.வசந்தி. அன்புள்ள அம்மா... உங்கள் வேதனையும், மனக்குறையும் எனக்கு நன்றாக புரிகிறது. உங்களுக்கு இருக்கும் சங்கடம் போன்று, உங்கள் மகளுக்கும் இருக்குமல்லவா? லட்சத்தில் ஒருவருக்கு இது போன்று நிகழ்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது, 'ஹார்மோன்' குறைபாடு காரணமாக ஏற்பட்டிருக்கலாம். மருத்துவ விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று விட்ட இந்த காலத்தில், இதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். கவலைப்படாதீர்கள்! சில சமயம் அதிக மன அழுத்தம், சோர்வு போன்ற காரணங்களாலும் இப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது. நல்ல மனநல ஆலோசகரிடம் இது குறித்து விவாதித்து ஆலேசனை பெறுவது பலன் தரக்கூடும். மனநல மருத்துவரை விட மனோதத்துவ நிபுணர்களும் இருக்கின்றனர். அவர்களின் கவுன்சிலிங் எனப்படும் உரையாடல்களும் உங்களுக்கு உதவக்கூடும். சாதாரண மருத்துவமனையை விட, மகளிர் பிரச்னையை தீர்ப்பதற்கென்றே, தனித்துவ மருத்துவமனைகள் உள்ளன. பெரிய நகரங்களில் இது போல் மருத்துவமனைகள் நிறைய உள்ளதை அறிவேன். சிறந்த மருத்துவமனைகள் குறித்த விபரம், இணைய தளத்தில் கிடைக்கிறது. பெரிய நகரங்களில் வசிக்கும் உறவினர்களிடம் கேட்டாலும் கூறுவர். சில விஷயங்களில், யாரையும் நம்பக் கூடாது என்றெல்லாம் நினைக்கக் கூடாது; நமக்கு உள்ள ரகசிய பிரச்னை வெளியில் தெரியக் கூடாது என்றும் நினைக்க வேண்டாம். மனம் திறந்து கேட்டால், வழிகள் திறக்கும். மகளின் பிரச்னையும் தீரும். பெண்கள் நல மருத்துவரிடம் முதலில் ஆலோசித்து, அந்த வழிகாட்டுதலில் முயற்சியைத் தொடருங்கள்; நிச்சயம் வெற்றி கிடைக்கும். - நிறைந்த அன்புடன், பிளாரன்ஸ்.