இளஸ் மனஸ்! (328)
அன்புள்ள தோழி... என் மகன், பிளஸ் 2 படிப்பவன். சென்னையின் பிரபலமான பள்ளியில் தான் சேர்த்திருக்கிறோம். நன்றாக படிக்க கூடிய மாணவன். பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாக வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, படிப்பில் ஆர்வம் குன்றி, கடந்த மாதாந்திர தேர்வில் ஆங்கிலம், கணக்கு, வணிகவியல் பாடங்களில் பெயிலாகி விட்டான். அறைக்கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு கொள்கிறான். தட்டினால் திறப்பதில்லை. சாவித்துவாரம் வழியாக பார்த்தால், உள்ளே விளக்கு எரிவதில்லை. கதவை ஓங்கி தட்டி திறக்க வைத்தால், எரிந்து விழுகிறான். சாப்பிட அழைத்தால், 'பசிக்கவில்லை...' என்று கோபமாக பதில் கூறி, கதவை திரும்ப மூடிக் கொள்கிறான். தலைவலி, வயிற்று வலி என்று காரணம் கூறி, சில நாட்கள் பள்ளிக்கே செல்வதில்லை. மருத்துவரிடம் அழைத்தாலும் வர மறுக்கிறான். முகத்திலும், கண்களிலும் துாங்காத களைப்பு தெரிகிறது. 'சரியாக துாங்கவில்லையா...' என்று கரிசனத்துடன் கேட்டால் கூட, 'எப்போது பார்த்தாலும் கேள்வி மேல் கேட்டு நச்சரிக்காதே' என்று எரிச்சலடைகிறான். அவனது திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. பயமாகவும் இருக்கிறது. தெளிவு பெற விரும்புகிறேன். இப்படிக்கு, வி.சரஸ்வதி அன்பு சினேகிதி... கவலையும், பயமும் வேண்டாம். பிளஸ் 2 மாணவன் என்றால் 15, 16 வயது இருக்கலாம். அந்த வயதில் ஏற்படுகிற சில உடற்கூறு மாறுதல்கள், இதற்கு காரணமாக இருக்க கூடும். உடல் விழித்துக் கொள்கிற காலகட்டம் இது. இதுவே, உங்கள் மகனின் பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவனுக்கென தனி மொபைல் போன், 'டிவி' இருந்தால், மனக் கிலேசத்தை அதிகரிக்கும் பழக்கங்களில் ஈடுபடத் துவங்குவான்; படிப்பில் கவனம் குன்றி விடும். அவனது நண்பர்களிடம் சாதாரணமாக பேசுவது போல் பேசுங்கள். குறையோ, குற்றமோ சொல்லாதீர்கள். வகுப்பறையில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். நண்பர்களின் பெற்றோரிடமும் பேசுங்கள். ஏனெனில் அவர்களின் மகன்களும், உங்கள் மகனின் வயதுடையவர்கள் தானே! அவனைத் திட்டித் தீர்த்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விடாதீர்கள். அவன் மனதில் அது ஆழமான வடுவாக மாறிப்போகும்; உங்களை என்றும் மன்னிக்க முடியாத கசப்புணர்வு தோன்றி விடும். கண்ணாடி பாத்திரம் போன்று கவனமாகக் கையாள வேண்டிய விஷயம் இது. மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல், அன்பாக பேசி அரவணைத்து, ஆதரவாக, பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். நல்ல மனநல மருத்துவரை அணுகி, அவரிடம் உங்கள் மகனின் பிரச்னையைக் கூறி, அவருடைய ஆலோசனைப்படி மகனிடம் பேசிப் பேசி, பிரச்னையை தீர்க்கலாம். காலம் கடத்தாமல் சீக்கிரம் செய்தால், அவன் படிப்பு பாழாகாமல் இருக்கும்! - அன்புடன், பிளாரன்ஸ்.