கற்பித்தலில் உத்தி!
கோவை, ஒண்டிப்புதுார், ராமசாமி செட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1986ல், 10ம் வகுப்பு படித்தேன். வரலாறு ஆசிரியையாக இருந்த சுப்புரத்தினம், மனதில் நன்கு பதியும் வகையில் எளிய உதாரணங்களுடன் பாடங்களை சொல்லித் தருவார். ஒவ்வொரு முறை, 'மேப்' வரையும் போதும், புதிய உத்திகளை கற்பிப்பார். நதிகளை, தோழியர் பெயர்களாக சித்தரித்து, மனதில் வைத்து கொள்ள சொல்வார். வரலாற்றில் போர் நடைபெற்ற ஆண்டுகளை, குடும்ப உறவினர் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போல், நினைவில் பதித்து கொள்ள அறிவுரைத்தார். தேர்வில், 10 மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்களுக்கு முக்கிய தகவல்களை பட்டியலிட்டு தெளிவாக எழுதப் பழக்கினார். விடைகளில் முக்கிய அம்சங்களை வண்ண அடிக் கோடிட்டு எடுத்துக் காட்டவும் பயிற்சி தந்தார். இதன் விளைவாக தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. இந்த கற்பித்தல் நடைமுறைகளை, என் மகளுக்கும், இப்போது பேரன் - பேத்தியருக்கும் சொல்லி கொடுத்து வருகிறேன். அதனால், பெரும் பயன் விளைந்துள்ளது. என் வயது 56; தனியார் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றேன். கல்வியைக் கற்பிப்பது மட்டுமல்லாமல், அதை வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தி வெற்றி பெறும் வழியையும் காட்டிய ஆசிரியை சுப்புரத்தினம் நினைவை, நன்றியுடன் போற்றுகிறேன். - கல்பனா ராஜகோபால், கோவை.தொடர்புக்கு: 95971 69210