அடி முட்டாள்!
கோவிந்தன் மகா சோம்பேறி. படிக்காமல், ஊரைச் சுற்றுபவன்; ஆள் தான், வளர்ந்தானே தவிர அறிவு வளரவில்லை. அவன் அப்பா மண்பாண்ட வியாபாரி. பொங்கல் பண்டிகைக்கு விற்க, கடை நிறைய பானைகள் அடுக்கி வைத்திருந்தார்.அந்த நேரம், பக்கத்து ஊரில் அவசர வேலை வந்தது. பண்டிகை காலத்தில், பானை வியாபாரத்தை கவனிக்க, மகனைக் கேட்டுக் கொண்டார். வியாபாரத்தின் போது, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பட்டியலிட்டார்.பின், ''சொல்வதை கவனமா கேள்... கடையில் கூட்டம் சேர விடாதே; வாடிக்கையாளரிடம், அதிகமாக பேசாதே...'' என அறிவுரைத்து புறப்பட்டார்.கடையில் அமர்ந்தான் கோவிந்தன். அடுக்கிய பானைகளில் விலை குறிப்பிடப்பட்டிருந்தது. பானை வாங்க வந்த வாடிக்கையாளர், ''என்னப்பா... விலையை கொஞ்சம் குறைத்து கொடு...'' என கேட்டார். அப்போது, 'யாருடனும் அனவாசியமாக பேசாதே...' என்ற அப்பாவின் அறிவுரை காதில் ஒலித்தது. அதை எண்ணியபடி அமைதியாக இருந்தான் கோவிந்தன்.காத்திருந்த வாடிக்கையாளர் அதிருப்தி அடைந்தார். எந்த பதிலும் அளிக்காததால் வேறு கடை நோக்கிப் புறப்பட்டார். அப்போது, ''அப்பாடா...'' என, வியர்வையைத் துடைத்தபடி, பானைக் கடைவாசலில் அமர்ந்தார் பலா விற்பவர். கூடையில் இருந்த பலாச்சுளையில் ஈக்கள் மொய்த்தன. அவற்றை, விரட்டியபடியே அமர்ந்திருந்தார். கடைக்குள் புகுந்து பானைகள் மீது அமர்ந்தன ஈக்கள்.கோபமடைந்த கோவிந்தன், ஈக்களை விரட்ட முயன்றான். திரும்பவும் வந்து பானைகளில் அமர்ந்தன. கோபம் தலைக்கேறியது.'கூட்டம் சேர விடாதே...' என, அப்பா கூறியது நினைவில் வந்தது. பெரியத் தடி ஒன்றை எடுத்தான். பானைகளில் மொய்த்திருந்த ஈக்களை கண்டபடி அடித்தான். அவை பறந்து தப்பின. பானைகள் எல்லாம் நொறுங்கின. பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இது பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை கோவிந்தன்.உடைந்த பானை ஓடுகளை பெருக்கி, குப்பைத்தொட்டியில் போட்டான்.ஊரிலிருந்து திரும்பினார் தந்தை. கடையில், ஒரு பானை கூட இல்லாதது கண்டார்.மிகுந்த மகிழ்ச்சியுடன் கடைக்குள் சென்றார். விஷயத்தைக் கேட்டு அழுது புலம்பினார்.குழந்தைகளே... அறிவுரைகளின் உண்மை பொருளைப் புரிந்து, வாழ்வில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அதுவே நன்மை தரும்.ஜெயா ராஜாமணி