உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

நண்பர் ஒருவர் சிறு தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணி, அதற்கான முயற்சியில், முழு மூச்சுடன் இறங்கினார்.நம்மூரில் ஒருவர் தொழில் துவங்க முனைந்தால், அவரை எல்லா வழிகளிலும் நோகடித்து, 'வேண்டாண்டா சாமி...' என, ஓட வைக்கும் கலையை, நன்கு அறிந்தவர்கள், நம் அரசுத்துறை அதிகாரிகள். உட்கார வேண்டுமா, அதற்கு ஒரு லைசன்ஸ். எழுந்திருக்க, பின்னால் திரும்பிப் பார்க்க, மேலே அண்ணாந்து பார்க்க என, ஒவ்வொன்றுக்கும் லைசன்ஸ் வாங்கியாக வேண்டும்.சரி... லைசன்ஸ் வாங்கலாம் என்றால், எந்த அதிகாரியிடம், எந்தத் துறையில் வாங்க வேண்டும் என்பதை சரியாகச் சொல்லி, வழி நடத்த, அரசுத் துறையில் ஆட்கள் கிடையாது.வெள்ளைக்காரன், 1880களில் போட்ட நடைமுறைக்கு ஒத்துவராத, அதே சட்டத்தை, கண்மூடித்தனமாக பின்பற்றி வருகின்றனர்.உள்ளாட்சித் துறை அலுவலகம் ஒன்றில் நுழைந்தோம். அங்கிருந்த இத்துறை தொடர்பான பெரிய அதிகாரியை அணுகி, அறிமுகம் செய்து, லைசன்ஸ் தொடர்பாக கேட்டபோது, தன் சகாக்களை அழைத்து, 'நம்ம துறையில், இது தொடர்பா லைசன்ஸ் கொடுக்கணுமா?' எனக் கேட்டார்.சகாக்கள் தமக்குள் விவாதித்து, பின்னர் சட்டப் புத்தகங்களைப் புரட்டி, ஒரு மணி நேரத்திற்குப் பின், 'நமக்கும், இதற்கும் தொடர்பில்லை...' என்றனர்.பின்னர் எங்கெங்கோ சுற்றியபின், சுகாதாரத் துறைக்கும், இதற்கும் தொடர்புண்டு என்பதை அறிந்து, அங்கு சென்றோம். 'ஆமா சார்... ஹெல்த் இன்ஸ்பெக்டர், சானிடரி இன்ஸ்பெக்டர், பொல்யூஷன் இன்ஸ்பெக்டர், டிரான்ஸ்போர்ட் இன்ஸ்பெக்டர்...' அந்த இன்ஸ்பெக்டர்... இந்த இன்ஸ்பெக்டர் என, வாயில் வந்ததை எல்லாம் சொல்லி, 'இவர்களிடம் இருந்தெல்லாம், என்.ஓ.சி., - 'நோ அப்ஜெக் ஷன் சர்டிபிகேட்' தொழில் துவங்க தடையேதும் இல்லை என்ற சான்றிதழ் வாங்க வேண்டும்...' என்றார்.மேலும், 'இந்த, 'சர்டிபிகேட்'களை எல்லாம் வாங்க குறைந்தபட்சம் மூன்று முதல், ஆறு மாதமாகலாம்...' என்றும் கூறினார்.நண்பர், 10 லட்ச ரூபாயை முதலீடு செய்து, தொழில் துவங்க தயார் நிலையில் இருக்கிறார். மூன்று முதல், ஆறு மாத வட்டியை கணக்கிட்டுப் பாருங்கள்...'சரி... என்ன தான் வழி?' என, நண்பர் கேட்க, 'இருபதாயிரம் ரூபா குடுங்க சார்... எல்லா சர்டிபிகேட்டுகளையும் வாங்கிக் கொடுத்துடுறேன். எல்லா இன்ஸ்பெக்டர்களும் தொழில் நடத்தப் போகும் இடத்தை நேரில் வந்து சோதனை செய்தது போல ஜோடனை செய்து கொள்ளலாம்...' என்றார்.இந்த கண்றாவியை எல்லாம் தூரத்தில் நின்று பார்க்கும் கொடுமை எனக்கு!அடுத்தது காவல்துறையில், என்.ஓ.சி., சர்டிபிகேட்...நகரின் பிசியான இடத்தில் உள்ள ஒரு காவல் நிலையம். அங்கு, ரைட்டரிடம் பேசிக் கொண்டிருந்தார் நண்பர். இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.'சார்... உங்க ஆர்வம் புரியுது... நாலு பேருக்கு வேலை கொடுக்க நினைக்கும் உங்கள் உபகார குணம் தெரியுது. ஆனா, இங்க, 'விட்டமின் ப' (பணம்) இல்லேன்னா, பேப்பர்ஸ் எதுவும், 'மூவ்' ஆகாது. எனக்கு ஒண்ணு குடுத்திடுங்க... எஸ்.ஐ., அரை நோட்டும் (ஐந்தாயிரம்), இன்ஸ்பெக்டர் முழு நோட்டும் வாங்குவாங்க...' எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, ஒரு போன் வந்தது... 'சார்... ரெண்டு நோட்டு ஆகுமுன்னு இன்ஸ்பெக்டர் சொல்லிட்டார்... சரின்னு நீங்க சொன்னா சுமூகமா முடிச்சிடலாம்...' என்றார் ரைட்டர்.ஏதோ ஒரு கேசை முடிக்க, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பேசுவது புரிந்தது.போன் பேசி முடிந்ததும், கை வண்டி ஒன்றில், மூன்று கூடை பழங்கள் வந்து இறங்கியது.'யோவ் வண்டிக்காரரே... இதெல்லாம் ஐயா (இன்ஸ்பெக்டர்) வீட்டுக்கு... ஜீப்புலே ஏத்தி விட்டுரு...' என்றார் ரைட்டர்.இங்கு, அங்கு என, இல்லாதபடி எங்கும் லஞ்சம் தலைவிரித்தாட துவங்கி விட்டது. இனி, எந்த ஆட்சியாளர் வந்தாலும், தடுத்து நிறுத்த முடியாது. ஓட்டல்களில் பண்டங்களின் விலைப் பட்டியலைத் தருவதைப் போல, இன்ன வேலைக்கு, இவ்வளவு அன்பளிப்பு என, 'ரேட் கார்'டை, அரசுத் துறை, காவல் துறை அலுவலகங்களில், பிரேம் போட்டு தொங்க விட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை!தமிழகத்தில், 10 -ஆம் வகுப்பு பரீட்சையில், ஒரு ஊரில் ஆசிரியர் ஒருவர், கேள்வித்தாள்களை மாற்றிக் கொடுத்து, குளறுபடி செய்த சம்பவம் பற்றி, பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, நண்பர் ஒருவர், 60 ஆண்டுகளுக்கு முன், தன் கல்லூரி வாழ்வில், இதே போன்று நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொன்னார்:ஏப்ரல், 1957ல், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில், இன்டர்மீடியட் தேர்வு எழுதிக் கொண்டிருந்தோம். அன்று, மொழிகளுக்கான இரண்டாவது பேப்பர்.ஆனால், வினியோகிக்கப்பட்ட வினாத்தாள்களைப் படித்து, மாணவர்கள் விழித்தனர். காரணம், அவை அன்றைய தேர்வுக்கான வினாத்தாள்கள் அல்ல; மறுநாள் தேர்வுக்கான வினாத்தாள்கள்.தவறை உணர்ந்ததும், கல்லூரி முதல்வர் எர் நாட், வினியோகிக்கப்பட்ட வினாத்தாள்களை திரும்பப் பெற்று, 'நடந்த தவறுக்கு வருந்துகிறேன். இப்போது, சரியான வினாத்தாளை கொடுக்கிறேன். பரீட்சை எழுதி முடித்தவுடன், யாரும் வெளியே போக வேண்டாம். மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பின் அறிவிக்கிறேன்...' என்றார்.அதன்படியே, தேர்வு எழுதி முடித்த பின், அவரவர் இடத்திலேயே மாணவர்கள் அமர்ந்திருந்தனர். பிற்பகல், 1:30 மணிக்கு எர்நாட் அறிவித்தார்... 'நான் சென்னைக்கு, 'ட்ரங்கால்' செய்து, பல்கலைக்கழக பதிவாளரிடம் பேசினேன். 'தேர்வு எழுதிய மாணவர்கள் வெளியே போனால், மாகாணம் முழுவதும் கேள்வித்தாள்கள், 'அவுட்'டாகிவிடும். அதனால், நீங்கள் இன்றைய பொழுதை இந்த ஹாலிலேயே கழித்துவிட்டு, நாளை, மூன்றாவது பேப்பரையும் எழுதிவிட்டு, வெளியே போகலாம்...' என்கிறார் பதிவாளர் (ரிஜிஸ்திரார்). உங்களுக்கு, ஆட்பேசணை உண்டா...' என்று கேட்டார்.அன்று, அந்த ஹாலிலேயே பொழுதை கழிக்க சம்மதித்தோம்.அடுத்த அரை மணி நேரத்தில், பரீட்சை ஹால், 'டைனிங்' ஹாலாக மாறியது. பரீட்சை எழுதிய, 200 மாணவர்களுக்கும், 2:00 மணிக்கு விருந்து சாப்பாடு. மாலை, 5:00 மணிக்கு இனிப்பு, காரம், காபி; பின், 6:00 மணிக்கு பொழுது போகவில்லை என்று, சில மாணவர்கள் புகார் செய்ததால், அந்த ஹாலிலேயே ஆங்கிலத் திரைப்படம் போட்டுக் காட்டப்பட்டது. அவரவர் வீடுகளிலிருந்து முடிந்த மட்டும் புத்தகங்களும், இரவு படுத்துறங்க படுக்கைகளும் தருவிக்கப்பட்டன. படிக்க விரும்பியவர்கள் படித்தனர்; (கேள்வித்தாள், 'அவுட்'டாகி விட்டதால், அந்த கேள்விக்குரிய பதிலை மட்டும் படித்தால் போதுமே.) விருப்பமில்லாதவர்கள் அரட்டை அடித்தனர்.மறுநாள் காலை கடன்களை முடிக்க, இரண்டு மாணவர்களுக்கு ஒரு பியூன் வீதம், காவலுடன் பாத்ரூமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின், 8:00 மணிக்கு, சூடான பொங்கல், காபி; ஒருவரும் குளிக்கவில்லை.பத்து மணிக்கு பரீட்சை; பிரமாதமாக எழுதினோம். பிற்பகல், 1:00 மணிக்கு ஹாலை விட்டு வெளியே வந்தோம்!— இது எப்படி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !