அந்துமணி பா.கே.ப.,
பா - கேலென்ஸ் மாமாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட தொழிலதிபர் ஒருவரது, 70வது பீமரத சாந்தி விழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. எனக்கும், அவர் அறிமுகமானவர் தான்.அந்த விழாவுக்கு என்னையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார், மாமா.மாளிகை போன்ற அவர் வீட்டில், விழா ஏற்பாடுகள் களை கட்டியிருந்தன. ஆன்மிகம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஒருவரது சொற்பொழிவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.தொழிலதிபரும், அவரது மனைவியும் நடு நாயகமாக அமர்ந்திருக்க, தன் உரையை துவங்கினார், சொற்பொழிவாளர். இடையிடையே மாமா, உள்ளே போவதும், வருவதுமாக இருந்தார்.எதற்கு என்று உங்களுக்கு புரிந்திருக்குமே!என் அருகில் வேறு யாரும் பேச்சு துணைக்கு ஆள் இல்லாததால், சொற்பொழிவை கேட்கலானேன்.அது...ஒருநாள், ஆன்மிக குருவான கபீர்தாசர் வீட்டில், ஏகப்பட்ட பக்தர்கள். எல்லாரும் அவரை சுற்றி உட்கார்ந்து, தங்களுக்கு ஏற்படுகிற ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தனர்.அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார், கபீர்தாசர்.இப்படியே அன்றைய பொழுது பூராவும் கடந்து போயிற்று.விளக்கம் கிடைத்த எல்லாரும் வீட்டுக்கு புறப்பட்டு போய் விட்டனர்.மாலை, 5:00 மணி. ஒருவர் மட்டும் போகாமல் உட்கார்ந்திருந்தார்.'உங்களுக்கு என்ன வேணும்?' என்றார், கபீர்தாசர்.அந்த ஆள் பதில் சொல்லத் தயங்கினார்.'உங்க முகத்தில் காணப்படுகிற அறிகுறிகளைப் பார்த்தால், உங்களுடைய இல்வாழ்க்கை சந்தோஷமாக இல்லை போலிருக்கே...' என்றார்.'உண்மை தான்... என் மனைவியும், நானும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தவில்லை. எப்ப பார்த்தாலும் சண்டை தான். நான் என்ன சொன்னாலும், எதிர்த்து பேசி, எரிந்து விழுகிறாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை...' என்றார்.'சரி, இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள். யோசனை செய்து பதில் சொல்கிறேன்...' என்று சொல்லி, வீட்டிற்குள் போனார். பெரிய நுால் கண்டு ஒன்றை கொண்டு வந்து, வீட்டுக்கு வெளிப்பக்கம் நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்தார், கபீர்தாசர்.அந்த பெரிய நுால்கண்டில் ஏகப்பட்ட சிக்கல்கள். அந்த சிக்கல்களையெல்லாம் ஒவ்வொன்றாக பிரித்தெடுக்க ஆரம்பித்தார். வெளியே நல்ல வெளிச்சமாகதான் இருந்தது. ஆனாலும், திடீரென்று உள்ளேயிருந்த தம் மனைவியை கூப்பிட்டு, 'இருட்டாயிருக்கு... விளக்கை ஏற்றி வா...' என்றார், கபீர்தாசர்.அந்த அம்மாவும் விளக்கை ஏற்றி வந்து, கபீர்தாசர் பக்கத்தில் வைத்து, 'இவ்வளவு வெளிச்சம் இருக்கு. இந்த நேரத்துல எதுக்கு விளக்கு?' என்று கேட்கவில்லை.கொஞ்ச நேரம் கழித்து, இரு குவளைகளில் தேநீர் கொண்டு வந்து, அவர்கள் முன் வைத்து விட்டு போனார்.இருவரும் அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தனர். வந்திருந்தவர் முகம் சுருங்க ஆரம்பித்தது. அவரால் தேநீரை குடிக்க முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?அந்த அம்மாள், தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை போட்டிருக்கிறார். மெல்ல கபீரின் முகத்தை கவனித்தார். அவர் முகத்திலோ சலனம் இல்லை. அவர் பாட்டுக்கு பேசாமல் அந்த தேநீரை குடித்துக் கொண்டிருந்தார்.வெளியே வந்த அந்த அம்மாள், 'தேநீருக்கு சர்க்கரை போதுமா, இன்னும் வேணுமா...' என்று கேட்டார்.'போதும், இனிப்பு சரியாகவே இருக்கிறது...' என்றார், கபீர்.எதிரே இருப்பவர், இவ்வளவையும் வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தார். கூடவே, தான் வந்த வேலை முடியவில்லையே என்ற கவலை அவருக்கு. தான் இருப்பதையே அவர் மறந்து விட்டாரோ என்று உள்ளூர சந்தேகம்.அதை ஞாபகப்படுத்த விரும்பி, மெல்ல கபீரை நோக்கி, 'நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே...' என்றார்.'நீங்கள் இருப்பதை மறக்கவில்லை. நான் இப்போது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னேனோ, அதுதான் உங்களுக்கும் பதில். 'யஜுர் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா... எந்த குடும்பத்தில், கணவனும், மனைவியும் ஒருவர் குற்றத்தை ஒருவர் பார்க்காமல் இருக்கின்றனரோ, அந்த குடும்பம் பூலோக கைலாசம் என்று சொல்கிறது.'இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பது தான்...' என்ற விளக்கம் அளித்தார், கபீர்தாசர். அதை விட்டுவிட்டு, இனிமேல், தினமும், காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பை போட்டுக் கொள்ளலாம் என்று, யாரும் முடிவு செய்து விடாதீர்கள்!சொற்பொழிவாளர் இப்படி கூறி முடிக்கவும், அங்கு பலத்த கரகோஷம் எழுந்தது.என் அருகில் அமர்ந்திருந்த லென்ஸ் மாமாவின் முகத்தை, நான் பார்க்க, 'குடும்பம்னா, கணவனும், மனைவியும் இப்படித்தான், 'அட்ஜெஸ்ட்' செய்துக்கணும் போலிருக்கே, மணி...' என்றார்.அவர் பேசிய தொனியிலிருந்தே, இதெல்லாம் அவருக்கு ஒத்து வராது என்று தோன்ற, மவுனமாக சாப்பிட கிளம்பினோம்.பவாய் விட்டு சிரிச்சா, நோய் விட்டு போகும் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம் அல்லவா!'ஆனா, சிரிப்புன்னா எல்லா விதமான தமாஷும் உடம்புக்கு நல்லதுன்னு நினைச்சுடக் கூடாது...' என, அமெரிக்க உளவியல் நிபுணரான, ஜேம்ஸ் காரோல்ங்கிறவர் சொல்றார்.அடுத்தவங்களை குறை சொல்றது, கேலி பண்றது போன்ற நகைச்சுவை எல்லாம் நல்லது செய்யாது.அடுத்தவங்களை தொந்தரவு பண்ணாத ஜோக்குகள் தான் எப்பவும் நல்லது. யாராவது ஜோக் சொன்னா, மனசு விட்டு தாராளமா சிரிக்கணும்.தன் நண்பரை அழைச்சுக்கிட்டு மனோதத்துவ டாக்டரிடம் வந்தார், ஒருவர். அந்த நபர், தன் முகத்தை ரொம்ப, 'சீரியசா' வச்சுக்கிட்டிருந்தார்.'என்னப்பா விஷயம்?'ன்னு விசாரிச்சார், டாக்டர்.'சார், இவர் என் நண்பர். இவருக்கு ஒரு பிரச்னை இருக்கு...' என்றார்.'என்ன பிரச்னை?' என்றார், டாக்டர்.'ஏதாவது ஒரு ஜோக் சொன்னா, உடனே சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிச்சுடறார் சார்...' என்றார், வந்தவர்.'ஜோக்கை கேட்டு சிரிக்க ஆரம்பிக்கிறது. பிரச்னை இல்லையே...' என்றார்.'சிரிக்க ஆரம்பிக்கிறது பிரச்னை இல்ல தான். ஆனா, அப்படி ஆரம்பிக்கிற சிரிப்பை அதுக்கப்புறம் நிறுத்தவே மாட்டேங்கிறார் சார். அதுதான் பிரச்னை...' என்றார், வந்தவர்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.