அந்துமணி பா.கே.ப.,
பா - கேஎழுத்தாள நண்பர் ஒருவர், நீண்ட இடைவெளிக்கு பின், என்னை சந்திக்க, ஸ்வீட் பாக்சுடன் அலுவலகம் வந்திருந்தார்.தென் தமிழகத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு அறக்கட்டளை, இவருக்கு விருது வழங்கி இருப்பதையும், புதிதாக கார் வாங்கி இருப்பதை பற்றியும் என்னிடம் கூறி, வாழ்த்து பெற வந்திருந்தார்.நல்லவேளை, லென்ஸ் மாமா அப்போது அங்கு இல்லை. இருந்திருந்தால், நண்பரை உண்டு, இல்லை என்று ஆக்கியிருப்பார். ஏனெனில், அந்த எழுத்தாள நண்பர், கொஞ்சம் சுய தம்பட்ட பேர் வழி.'இவரே காசு கொடுத்து விருது வாங்கியிருப்பார்...' என்று, வறுத்தெடுத்து இருப்பார்.நண்பரை வாழ்த்தி, அனுப்பி வைத்தேன். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், 'நேற்று வரைக்கும், நம் கூடவே இருந்திருப்பான். இன்னைக்கு புதுசா பவிஷு வந்ததும், யார் நீங்க, உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கேன்னு சொல்லுவான்...' என்று புலம்பியபடியே வந்தமர்ந்தார், 'திண்ணை' நாராயணன்.விஷயம் ஓரளவு புரிந்தாலும், 'இந்த புலம்பலுக்கு என்ன காரணம்...' என்று, விசாரித்தேன்.'என்ன மணி... தெரியாத மாதிரி கேட்கற. இப்ப வந்துட்டு போனானே அந்த எழுத்தாளரை பற்றித்தான் சொல்றேன். அலுவலக வாசலில் அவனை பார்த்தேன்.'அறிமுகமானவன் ஆச்சே என்று, 'என்னப்பா நல்லா இருக்கியா... என்ன விசேஷம், ஆபீஸ் வரைக்கும் வந்திருக்கே'ன்னு கேட்டேன்.'புது கார் வாங்கியிருக்கான் போலிருக்கு. காரில் ஏறியபடி, ஞாபகமறதிக்காரன் போல், என்னை யாரென்று தெரியாதது மாதிரி அலட்சியமா போறான்...' என்றார்.'இதுக்கு போயி ஏன், 'டென்ஷன்' ஆகறீங்க? ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு இருக்கும். உங்க எதிர்பார்ப்புக்கு ஏற்ப வரணும்ன்னு விரும்பினால் முடியுமா?' என்று சமாதானப்படுத்தினேன், நான்.'நீ சொல்றது நுாத்துக்கு நுாறு உண்மை தான். மனசு கேட்கல; அதான் புலம்பிட்டேன், மணி. ஞாபகமறதி பற்றி முன்பு படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருது...' என்று, சொல்ல ஆரம்பித்தார்:ஞாபக மறதியையும், சிலருக்கு அடையாளமா சொல்றது வழக்கமாப் போச்சு. சில பேரிடம் அது இயல்பாகவே இருக்கும். அதை நாம குறையா சொல்றதும் தப்பு. அபாரமான ஞாபக சக்தியுள்ள அறிஞர்களும் உண்டு; கவிஞர்களும் உண்டு.பிரிட்டனை சேர்ந்த, கவிஞர் பைரன், எவ்வளவோ கவிதைகள் எழுதினார். அதுல எதை வேணும்னாலும், எந்த சமயத்துல கேட்டாலும், ஒரு சின்ன தவறு கூட இல்லாம ஒப்பிச்சுடுவாராம்.ஆனா, ஸ்காட்லாந்தை சேர்ந்த, வால்டர் ஸ்காட்-ங்கிற கவிஞர், அதுக்கு நேர் விரோதம். ஒரு சமயம், பைரன் எழுதின கவிதைன்னு நினைச்சுக்கிட்டு, அவரோட சொந்த கவிதையையே ரொம்ப புகழ்ந்து பாராட்டி பேசிக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு ஞாபக மறதி.அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாரே, தியோடர் ரூஸ்வெல்ட். அவருக்கு ஞாபக சக்தி ரொம்பவும் அதிகம். பலரை சந்திக்கணும், -பேசணும்ன்னு ஆர்வம் உடையவர்.அவர், யாரை சந்திச்சாலும் சரி, அவரோட பழக்க வழக்கம், அடையாளம் இதையெல்லாம் நல்லா கவனிச்சு, மனசுல பதிய வச்சுக்குவாராம். இது, அரசியல்ல அவருக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கு.ரெண்டாவது முறை இவர்களில் யாரையாவது சந்திக்கிறப்போ, ரொம்ப வேண்டப்பட்டவரைக் கூப்பிடறது மாதிரி, பேர் சொல்லி கூப்பிடுவாராம். சம்பந்தப்பட்ட ஆசாமிக்கு, உச்சி குளிர்ந்து போயிடும்.ஒரு சமயம், ஜப்பானிய பாங்க் அதிபர் ஒருத்தரை பார்த்திருக்கார், ரூஸ்வெல்ட். 15 வருஷத்துக்கு முன், அவங்க பேசிக்கிட்டிருந்த விஷயத்தை இப்போதும் தொடர்ந்து பேசினாராம், ரூஸ்வெல்ட். அசந்து போயிட்டாராம், பாங்க் அதிபர்.அவருக்கு எப்படி இவ்வளவு ஞாபகசக்தி வந்தது? அவரு மனசை ஒரு நிலைப்படுத்தறதுக்கு நல்லா பழகியிருந்தார். ஒருமுறை, பிரேசிலுக்குப் போயிருந்தார். ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து, இப்பன் எழுதின, 'ரோம் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி'ங்கிற நுாலை படிச்சுக்கிட்டிருந்தவர், அதுலயே லயிச்சுப் போயிட்டார், ரூஸ்வெல்ட்.கொஞ்ச நேரத்துல மழை பெய்ய ஆரம்பிச்சுட்டுது. அது கூட தெரியாம இவரு சொட்டச் சொட்ட நனைஞ்சுக்கிட்டே படிச்சுக் கிட்டிருந்தாராம். மனசை அந்த அளவுக்கு ஒருமுகப்படுத்தக் கூடியவர். அதுதான் அவரது ஞாபக சக்திக்குக் காரணம்.எழுத்தாளரான சர் பிரான்சிஸ் பேகன் எப்படி தெரியுமா? தன் பிரபலமான புஸ்தகங்கள்ல ஒன்றை ஞாபகத்துல இருந்து, சொல்லியே எழுத வைத்துள்ளார்.நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு மறதி அதிகம். அவரிடம், கார்லைல் ராபின்ஸன்- என்கிறவர், செயலாளராக ஏழு ஆண்டுகள் வேலை பார்த்தார். எப்பவும் சார்லி சாப்ளின் கூடவே இருந்தவர். அப்படி இருந்தும் அவரோட முழுப்பெயரும் சார்லி சாப்ளினுக்கு ஞாபகம் இல்லையாம்.- இவ்வாறு கூறி முடித்தார், நாராயணன்.'அந்த எழுத்தாள நண்பருக்கு நன்றி சொல்லணும். ஏனெனில், அவர் பாராமுகமாக சென்றதால் தான், ஒரு அருமையான மேட்டர் கிடைத்தது...' என்றேன், நான்.மையமாக ஒரு சிரிப்பு சிரித்தார், 'திண்ணை' நாராயணன்.எது எப்படியோ, நம்மைப் பொறுத்தவரைக்கும், நாம ஞாபகசக்தியை வளர்த்துக்கிறது தான் நல்லது. மனசை ஒருமுகப்படுத்தப் பழகிக்கிறது தான், அதுக்கு சிறந்த வழி என்று, நினைத்துக் கொண்டேன், நான். பதெருவில் நடந்து வந்துக்கிட்டிருந்தார், ஒருவர். இருட்டு நேரம், வழியில ஒரு பெரிய கருங்கல் இருப்பதைப் பார்த்தார். கொஞ்ச நேரம் யோசிச்சார். போய் துாக்கிப் பார்த்தார். ரொம்ப கனமா இருந்தது.உடனே, ரோட்டு ஓரமா போய் ஒரு மரத்தடியில உட்கார்ந்து, ரெண்டு பக்கமும் யாராவது வர்றாங்களான்னு பார்த்துக்கிட்டிருந்தார். கொஞ்ச நேரத்துல, இவருக்கு தெரிஞ்ச ஒருத்தர் வந்தார்.'என்னங்க, இந்த நேரத்துல இங்கே உட்கார்ந்திருக்கீங்க...' என்றார்.'அதோ அந்த கருங்கல்...' என, அதை சுட்டிக் காட்டினார்.'ஓ... அதை துாக்கி ஓரமா போடணுமா... வாங்க, ரெண்டு பேரும் துாக்கலாம்...' என்றார், வந்தவர்.'நான், அதுக்காக உட்கார்ந்திருக்கலே...' என்றார், இவர்.'பின்ன வேற எதுக்காக...' என்றார்.'ஒரு மனுஷன், கருங்கல்லுல காலை இடிச்சுக்கிட்டான்னா, எப்படி துள்ளுவான்னு பார்க்கணும்ங்கிறது, எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. அதுக்காக உட்கார்ந்திருக்கேன்...' என்றார்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.