உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம்.க்கு வயது 50!

நம் வங்கி சேமிப்பு பணத்தை எடுக்கும், 'ஆட்டோமேடட் டெல்லர் மிஷின்' எனப்படும், ஏ.டி.எம்., சில மணி நேரத்திற்கு செயலாற்றவில்லையென்றால், தவித்துப் போகிறோம். உலகம் முழுவதுமே இன்றைக்கு இதே நிலை தான்!பயணம் போகும்போது, ஏ.டி.எம்., கார்டு இருக்கிறதா என்பதை, ஒரு தடவைக்கு இரண்டு தடவை, சரி பார்த்து கொள்கிறோம். இப்படி, நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட, ஏ.டி.எம்., ஜூன் 27, 1967ல் உலகிற்கு அறிமுகமாகி, பயன்பாட்டிற்கு வந்து, 50 ஆண்டுகளை கடந்து விட்டது. இதை, கண்டு பிடித்தது, ஓர் இந்தியர்; அதற்கு உறுதுணையாக இருந்தது, மற்றொரு இந்தியர் என்பதை அறியும் போது, இந்தியர்களாகிய நம் எல்லாருக்கும் எத்தனை பெருமை, மகிழ்ச்சி!நம் நாட்டின், மேகாலயா மாநிலம், ஷில்லாங் நகரில், 1925ல் பிறந்த, ஜான் ஷெப்பர்ட் பாரன் என்பவர், நம் ராணுவத்தில் சில காலம் பணியாற்றி, பின், இங்கிலாந்து நாட்டில் செட்டிலாகி விட்டார். இவர், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வங்கிக்குச் சென்று, பணம் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.அந்த வார சனிக்கிழமை, வங்கிக்கு சற்று தாமதமாகச் செல்ல நேர்ந்தது. வங்கிப் பணியாளர்கள் வாசலை மூடி விடவே, ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அவர், ஏ.டி.எம்., குறித்து யோசிக்க ஆரம்பித்தார். இது நடந்தது, 1965ல்!அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய போதே, அவர், 'பின் நம்பரை' (PIN - Persona Identification Number) உபயோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால், அது, ஆறு இலக்கங்கள் கொண்டது. 'பர்க்லேஸ்' வங்கி மானேஜரிடம், தனக்காக, 90 செகண்ட் ஒதுக்க வேண்டியும், காசு கொட்டும் மிஷினைப் பற்றி விளக்குவதாகவும் கூற, அவரும், 'சரி' என்று சொல்லி, அடுத்த நாளே நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.பாரனின் விளக்கத்தைக் கேட்ட, 'பர்க்லேஸ்' வங்கி, ஆறு மிஷின்களை நிர்மாணித்து தந்தது. முதல் மிஷினை, ஜூன் 27, 1967ல் வடக்கு லண்டனின் புறநகரான, 'என்பீல்ட்' என்ற இடத்தில் நிறுவியது. முதலில், ஆறு இலக்க, 'பின்' தான் இருந்தது. ஆனால், பாரனின் மனைவி கரோலின், நான்கு இலக்க எண்ணை மட்டுமே தன்னால் எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமென்றும், ஆறு இலக்கம் பெரிதென்றும் கூறியதால், நான்கு இலக்க, 'பின்'னை அறிமுகப்படுத்தினார், பாரன். இது, எப்படி சாத்தியமாயிற்று என்பதற்கு, பாரன் சொன்ன பதில்...'சீனிவாச ராமானுஜனின் பகிர்வு கோட்பாடு தான், என் மிஷினின் அடிப்படை; அவர், பல சிரமங்களுக்கு இடையே, லண்டன் டிரினிடி கல்லுாரியில் சேர்ந்து, இந்த பகிர்வு கோட்பாட்டினை விளக்கியிருந்தார். அந்த விளக்கம் மட்டும் இல்லையென்றால், ஏ.டி.எம்., சாத்தியமாகி இருக்காது. உதாரணமாக, 4 என்ற எண்ணை, ஐந்து விதமாகப் பிரிக்கலாம்1+1+1+1, 1+1+2, 2+2, 1+3, மற்றும் 4!இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு தான், நாம் கேட்கும் பணம், தவறின்றி நமக்குக் கிடைக்கிறது.இந்த இரண்டு இந்திய ஜாம்பவான்களுக்கும் பெரிய, 'சல்யூட்!'- ரெ.ஆத்மநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !