உள்ளூர் செய்திகள்

ஆண் எழுத்து!

''அம்மா...'' என, கூவியபடி வீட்டுக்குள் வந்த திலீப் குமார், ''எப்படிம்மா இருக்க... வேளா வேளைக்கு மருந்துகளை எடுத்துக்கிறியா... உன் பி.சுசீலா குரலை போன்ல கேட்டு, திருப்தியடையாத நான், நேரா கேக்க ஓடோடி வந்திட்டேன்.''''மருமகள் எங்கடா?'' என்றாள், சிவமங்கை.''அவ அப்படியே குழந்தைகளோடு அவங்கம்மா வீட்டுக்கு போயிட்டா. நாலு நாள் கழிச்சு நானும், அவளும் விழுப்புரத்ல இருந்து சென்னைக்கு ஒண்ணா போயிடுவோம்.''''அவளையும் கூட்டிட்டு வந்திருக்கலாமேடா?''பேச்சை மாற்றினான். ''பச்சை குழந்தை எங்கம்மா... நீ ஒழுங்கா பார்த்துப்பன்னு தான் அந்தக் குழந்தையை நானும், அண்ணனும் உன்கிட்ட விட்ருக்கோம். அது எததை சமைச்சு கேக்குதோ அதெல்லாம் சமைச்சுப் போடு,'' என, அப்பாவை தான், 'பச்சைக் குழந்தை' என, குறும்பாக குறிப்பிட்டான்.''பச்சைக் குழந்தைக்கு நேத்து ராத்திரி முட்டை புரோட்டாவும், ஈரல் கிரேவியும் செஞ்சு குடுத்தேன்; துாங்கிட்டு இருக்கு. எழுப்பி கேள், அது மனம் கோணாம சமைச்சு போடுறேனான்னு?''அத்தையும், மாமாவும் மாடியிலிருந்து இறங்கி வந்தனர். ''வாடா திலீப்பு, எப்டி இருக்க?'' ''நான் நல்லாயிருக்கேன்; நீங்கல்லாம் எப்டி இருக்கீங்க?''''நல்லா இருக்கம்டா. திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் கோவிலையும், கல் மரப் பூங்காவையும் பார்க்க வந்தோம்.''எங்க கூட தாத்தா, பாட்டி வந்திருக்காங்க. ரெண்டு பேரும் மேல ஓய்வு எடுக்கிறாங்க.''அப்பாவின் படுக்கையறைக்கு சென்றான், திலீப்குமார். குப்புறப்படுத்து துாங்கிக் கொண்டிருந்தார், இந்திரஜித். ''குழந்தை, எழுந்திரு. நான் திலீப்குமார் வந்திருக்கேன்.''''காலைல வந்து துாக்கத்தை கெடுக்கறியேடா... வா வா,'' என்று எழுந்து அமர்ந்தார். அவரது பெரிய தொப்பையை தடவிக் கொடுத்தான்.''நல்லா பார்த்துக்கப்பா, பச்சைக்குழந்தையை...- எவ்வளவு செழிப்பா இருக்குன்னு,'' என்றாள், சிவமங்கை.''மங்கை... காலைல, இடியாப்பமும், ஆட்டுக்கால் பாயாவும் செஞ்சிரு; மதியம், கைமா பிரியாணியும், மூளை கிரேவியும் செஞ்சிரு,'' தன் உணவு விருப்பத்தை விருந்தாளிகளுக்கான உணவாக அறிவித்தார், இந்திரஜித். காலை உணவு முடித்து அனைவரும் வரவேற்பறையில் குழுமினர். தன் சூட்கேஸிலிருந்து எதையோ எடுத்து வந்து, ''உங்க எல்லாருக்கும் ஒரு, 'சர்ப்ரைஸ்' காட்டப் போறேன்,'' என்றான், திலீப்குமார்.''பதவி உயர்வு ஆணையா?'' மாமா. ''சென்னையில இரட்டை படுக்கையறை பிளாட் வாங்கிட்டியா?'' தாத்தா. ''பார்ட்டைம் எம்.பி.ஏ., முடிச்சிருக்கியா?'' சிவமங்கை. ''வயநாடு ரிசார்ட்ல ஒரு வாரம் தங்கி, ஜாலியா இருக்க, 'புக்' பண்ணியிருக்கியா?'' அப்பா.''அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் வாழ்க்கையில மொத தடவையா ஒரு சிறுகதை எழுதிருக்கேன்,'' என்ற திலீப்குமார், அனைவரின் கைகளுக்கும் பொதுவாக நீட்டினான். மங்கையின் இதயத்தில் மென்தால் ஜிகுஜிகுப்பு.கடந்த, 30 ஆண்டுகளாக ஏதோ ஒரு குற்றச் செயல் புரிவது போல ஒளிந்து மறைந்து, கதைகள் எழுதி வருகிறேன். எழுத்தில் மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவுக்கு சாதித்து இருக்கிறேன். 'சிவமங்கை... உன் சிறுகதை வாசித்தேன். பிரமாதமாக எழுதி இருக்கிறாய். வாழ்த்துக்கள்...' என, குடும்ப அங்கத்தினர்கள் யாராவது சிலாகிப்பரா என, ஏங்கியிருக்கிறேன்.திருமணமான புதிதில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத ஹால் டிக்கெட் வந்தது. இந்திரஜித் தாம்துாம் என்று குதித்தார். 'வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவான்னுதான இவளை கல்யாணம் பண்ணினேன். இவ, ஐ.ஏ.எஸ்., தேர்வாகி வேலைக்கு போயிட்டா, வீட்டை யார் கவனிச்சிக்கிறது... இதுக்குத்தான் ஏழாம் கிளாஸ், எட்டாங் கிளாஸ் படிச்சவளை கல்யாணம் பண்ணணும்ன்னு சொல்றது. புருஷன் முக்கியமா, ஐ.ஏ.எஸ்., பரிட்சை முக்கியமான்னு நீயே முடிவெடு மங்கை...' என்றார்.மனதை கல்லாக்கிக் கொண்டு ஹால் டிக்கெட்டை கிழித்து போட்டாள், சிவமங்கை.விரால் மீன் குழம்பை தேங்காய் சோற்றில் ஊற்றினாள். 'ஏங்க... நான் ஒரு சிறுகதை எழுதிருக்கேன்... சாப்பிட்டு முடிங்க, படிச்சுக் காட்றேன். கதை நல்லாருக்கான்னு ஒரு வார்த்தை சொல்லுங்க...''திருப்தியா சாப்பிட விடுறியா... குடும்பத்துப் பெண்ணுக்கு எதுக்கு கதை எழுதுற வேலை. ஹால் டிக்கெட்டை கிழிச்சு போட்ட மாதிரி, கதையையும் கிழிச்சு போட்ரு...''நம் ரெண்டு குழந்தைகளையும் கவனமா வளர்ப்பேன். உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுறதில எந்த குறையும் வைக்க மாட்டேன். உங்க சொந்த பந்தங்களை நல்லா உபசரிப்பேன். வாரத்துல ஒரு சில மணிநேரம் ஒதுக்கி கதை எழுதிக்கிறேன். கையெடுத்து கும்பிடுறேன் கதை எழுத என்னை அனுமதிங்க...''ஆறு மாசம், 'டயம்' தரேன்... குடும்பம் நடத்துறதில் எந்த குறைபாடும் இல்லாம பார்த்துக்கிட்டு எதையாவது கிறுக்கிக்க. மீறி எதாவது ஆவலாதி வந்துச்சு, நீ எழுதின கதைகளை எல்லாம் தீ வச்சு கொளுத்திருவேன்...'பிரபல வார இதழில், சிவமங்கையின் சிறுகதை பிரசுரமானது.'உன் கோழி கிறுக்கல்களை எல்லாம் பத்திரிகைகாரன் போடுறான்னா, அந்த பத்திரிகை தரம் அதலபாதாளத்துல விழுந்திருச்சுன்னு அர்த்தம். கதையில எங்களை எல்லாம் கொடுமைக்காரியா காட்டிறாதடி அம்மா...' என்றார், நாத்தனார்.'கதை எழுதுறது, கவிதை எழுதுறது ஆம்பிளைங்க வேலை. உனக்கெதுக்கு வேண்டாத வேலை...' என்றார், மாமனார்.'கதை எழுதுற திமிர்ல எங்களை எல்லாம் இளப்பமா பார்த்திராதடி மருமகளே...' என்றார், மாமியார்.சிவமங்கை கதை எழுது ஆரம்பித்து, 10 ஆண்டுகளுக்கு பின் நாத்தனாரின் கணவர் ரகசியமாக, 'கதை எழுதுறத விட்டுட்டதான... கழுதையை எத்தினி நாள்தான் துாக்கி சுமப்ப?' என, கேட்டார்.மையமாக முறுவலித்தாள், சிவமங்கை. சில நேரம் சிவமங்கை கதை எழுதும்போது, உடனிருந்து கவனிப்பான், திலீப்குமார்.'கணவரும், அவரது சொந்த பந்தங்களும் தான் கதை எழுதுவதை உதாசீனப்படுத்துகின்றனர். என் இரு மகன்களா கதைகளை படித்து, பாராட்டி விடப் போகின்றனர்?' என, எழுதும் கதைகளை மகன்களிடம் காட்ட மாட்டாள்.'இன்று, ஒரு கதை எழுதி வந்திருக்கிறான், திலீப்குமார். கணவரும், அவரது சொந்தங்களும் அவனை திட்டி தீர்க்கப் போகின்றனர்...' என நினைத்தாள், சிவமங்கை.''என்ன, கதை எழுதியிருக்கியா... மிகப்பெரிய விஷயமாச்சே. தாத்தா, அறிவு அப்பன், அறிவு மகனுக்கு வராமயா போயிடும்... நீ எழுதின கதையை உரக்க படிச்சு காமிச்சிரு,'' என்றார், இந்திரஜித்.உரக்க வாசித்தான், திலீப்குமார். குழந்தை தொழிலாளர் பற்றி புதிய கோணத்தில் உருக்கமாக எழுதியிருந்தான். அனைவரும் கை தட்டினர். ''விடாம எழுதுடா. பார்க்குற வேலைக்கு பாதிப்பில்லாம. கூடுதல் வருமானம் வர்ற மாதிரி பார்த்துக்க. நல்ல புனைபெயரா வச்சுக்க,'' என்றாள், அத்தை.''சென்னையிலதான இருக்க. அப்படியே சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதுற வாய்ப்பு கிடைக்குதான்னு பாரு,'' என்றார், மாமா.'கொஞ்ச நாள் தமிழ்ல எழுதுடா. அப்புறம் இங்கிலீஷ்ல எழுது. அமேஸான் லட்டு மாதிரி வாங்கிப் போட்டுப்பான்; கையால எழுதாத, நேரடியா மடிகணினில எழுது; குறும் படம் எடுக்கிறவன் யாரையாவது பிடி. உன் கதையில நாலு குறும் படம் வந்தா, 'பேமஸ்' ஆயிடுவ; நேரடி சினிமாவுக்கு கதை எழுதுற வாய்ப்பு கூட கிடைக்கும்.'எழுத்தாளன்னா தோரணை முக்கியம், ஜிப்பா போட்டுக்க; ஜோல்னாப்பை மாட்டிக்க; 'கூலிங் கிளாஸ்' அணிஞ்சுக்க; இப்பவே உன்கிட்ட ஆட்டோகிராப் வாங்கிக்கிறோம். ஒரு எழுத்தாளனோட சொந்தம்ன்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு.'ஐ.டி., நிறுவனத்தில் நுழைவதெப்படி-ன்னு புத்தகம் போடு, விற்பனை பிச்சிக்கும்; சமையல் குறிப்புகள் பத்தி புத்தகம் எழுதினா லட்சக்கணக்குல விற்கும்; ராஜேஷ் குமார் மாதிரி க்ரைம் கதைகள் எழுது...' என, ஆளுக்கு ஆள் திலீப்குமாரை துாக்கி வைத்து கூத்தாடினர்.'அடப்பாவிகளா... அன்னைக்கி பொட்டச்சி நான் கதை எழுதினதுக்கு, ஏதோ தேச துரோகம் பண்ணிட்ட மாதிரி என்னை திட்டி சபிச்சீங்க... இன்னைக்கி என் மகன் ஒரு ஆம்பிளை கதை எழுதினதுக்கு கொண்டாடுறீங்க... இது, ஓரவஞ்சனை இல்லையா...'உலகின் எல்லா நுண்கலைகளும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா... பெண்கள் வெறும் சமையலறை, படுக்கையறை பாவைகளா... எழுத்தைக்கூட ஆண் எழுத்து, பெண் எழுத்து என, பிரித்து பார்க்க உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது?'என் மகன் கதை எழுதுவது, என் எழுத்தின் தொடர்ச்சி. சிறு வயதில் எனக்கு தெரியாமல் என் கதைகளை படித்து, ஒரு எழுத்தாளனாக உருவெடுத்திருக்கிறான். ஒரு செடியாய் நிற்கும் அவனை, ஆல மரமாக்க வேண்டும். அவன் சிறந்த எழுத்தாளராக வளர, என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். நான் அடையாத எழுத்து உச்சத்தை என் மகன் அடைய வேண்டும்...' என, நினைத்துக் கொண்டாள், சிவமங்கை.''மகனே... பிரமாதமாக எழுதியிருக்கிறாய். தாத்தாவின் அறிவும், அப்பாவின் அறிவும் உனக்கு ஒரு சேர கிடைத்திருக்கிறது. பெரியவர்களின் வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் ஏற்று, நீ மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்,'' என, மகனின் நெற்றியில் முத்தமிட்டாள், சிவமங்கை. கதைப் பிரதியை அம்மாவின் காலடியில் வைத்தான், திலீப்குமார். ''அம்மா... என் எழுத்துக்கள், உன் எழுத்துக்களுக்கான முதல் மரியாதை. தாய்பாலுடன் எழுத்து திறமையையும் எனக்குள் அனிச்சையாக புகட்டினாய் நீ. பெண்மை இந்த பூமிபந்து சுழலுவதற்கான, மசகு எண்ணெய். முதல் பரிசுக்கான ஓட்டத்தை ஓடிவிட்டு, பரிசை ஆண்களுக்கு கொடுக்க சொல்லி பார்வையாளராக நின்று கை தட்டுகின்றனர், பெண்கள். நான் எழுத்தில் ஏதேனும் சாதித்தால், அதை உன் எழுத்துக்கு சமர்பிக்கிறேன்,'' என்றான், திலீப்குமார்.''நான் எழுதிய கதைகளில் மிகச்சிறந்த கதை நீதானடா,'' உச்சிமுகர்ந்தாள், சிவமங்கை.''புகழ்பெற்ற எழுத்தாளராக போகும் மகனை, இப்பவே காக்கா பிடிக்கிறா, என் பொண்டாட்டி. இரவுக்கு கரி தோசையும், சிக்கன் கிரேவியும் செஞ்சிடு,'' என்றார், பெண் எழுத்தாளரின் கணவரும், ஆண் எழுத்தாளரின் அப்பாவுமாகிய, இந்திரஜித்.ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !