உள்ளூர் செய்திகள்

இனிப்பு ஆற்றலும், ஆபத்தும்!

அக்., 21 உலக இனிப்பு தினம்!இனிப்பு சுவை தான், நம் உடலில் எல்லா தாதுக்களையும் வளர்க்கிறது. நம் உடல் பொலிவுக்கும், நீண்ட ஆயுளைத் தருவதும், உடலுக்கு நல்ல நிறம் தருவதும் இனிப்புச் சுவை தான்.வாத, பித்தங்களையும், நஞ்சையும், நா வறட்சியையும் போக்குகிறது. தோலுக்கு மினுமினுப்பு, தலை முடி வளர்ச்சி மற்றும் குரல் வளமைக்கும் கூட, இது தான் முக்கியமானது.இனிப்பு சுவை, உடலில் குறிப்பிட்ட அளவு இருந்தால், எந்தவொரு பிரச்னையும் இல்லை. அதுவே அளவு கூடுதலானால், சோம்பல், துாக்கத்தில் குறைபாடுகள், உடல் பருமன், சளி சேர்தல், சுவாசக் கோளாறு, கட்டிகள் உருவாகுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை கொண்டு வரும்.இனிப்பு என்றாலே அது சர்க்கரை தான். எனவே, அளவோடு இனிப்பு சாப்பிட அறிவுறுத்துகின்றனர், மருத்துவர்கள். இனிப்பை அதிகம் சேர்த்துக் கொண்டால் எரிச்சல், சிடுசிடுப்பு, மனதிலும், உடலிலும் சக்தியின்மை போன்றவை உண்டாகும். இதற்கு காரணம், 'ஹைப்போ கிளைகாமியா' என்ற நரம்பியல் கோளாறு தான்.இனிப்பை குறைத்துக் கொண்டால், நரம்புகள் பாதிப்படைவதில்லை என, பிரிட்டன் சத்துணவு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.நம் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவும், சில தாதுக்கள் குறையும் பட்சத்தில், இனிப்பு சாப்பிட வேண்டிய உணர்வு அதிகரிக்கும். ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவதால், இனிப்புகளுக்கான ஆசையை கட்டுப்படுத்த இயலும். ஏனென்றால், உடலுக்கு தேவையான ஆற்றல், கொழுப்புகளிலிருந்து கிடைத்து விடும். முடிந்தவரை புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, சர்க்கரை அளவை குறைக்க உதவும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள இயற்கையான சர்க்கரையை, நம் உடல் மிக மெதுவாக உறிஞ்சிக் கொள்ளும். சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது தேனை பயன்படுத்தி, உணவை இனிப்பாக மாற்றுங்கள். இனிப்புக்கு பதிலாக உலர் பழங்கள், ஜாதிக்காய், லவங்கப்பட்டை பயன்படுத்தலாம்.நீங்கள் வாங்கும் உணவுப்பொருள் லேபிளில், அதிக சர்க்கரை என குறிப்பிட்டிருந்தால், அதை தவிருங்கள். நேரடி சர்க்கரை கலந்த பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக சாதாரண தண்ணீர், மூலிகைகள் கலந்த தேநீர் பருகுங்கள். மைதாவில் தயாராகும் உணவுகளை தவிருங்கள்.இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால், டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும். அதனால், இனிப்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.போதுமான துாக்கம் இல்லை என்றால், உடனடி ஆற்றல் பெறும் நோக்கில் நாம் இனிப்புகளை சாப்பிட துாண்டப்படுவோம். எனவே, எட்டு மணி நேரம் துாக்கம், மிகவும் அவசியம்.- கோவீ. ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !