தன்னையே கரைத்துக் கொள்ளும், தாசில்தார் மாரிமுத்து!
கிராமத்தில், மண் சுவர் வாடகை வீட்டில் வசித்தவர், மாரிமுத்து. கற்ற கல்வியால்,இன்று, தாசில்தாராக உயர்ந்து நிற்கிறார். கடந்த, 13 ஆண்டுகளாக, தனக்கு வாழ்வு தந்த கல்வியால், வார விடுமுறை நாட்களில், ஏழை மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறார்.விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர், மாரிமுத்து. கல்வி தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து, நன்கு படித்து, பள்ளி, கல்லுாரியில் முதல் மாணவராக வந்தார்.அரசு தேர்வு எழுதி, 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' ஆக பதவி உயர்வு பெற்றார். பின், படிப்படியாக முன்னேறி, இன்று, சாத்துாரில், நில எடுப்பு தாசில்தாரராக பணிபுரிகிறார். பத்து பைசா லஞ்சம் வாங்காத, நேர்மையான அதிகாரியான இவர் செய்து வரும் பணி, மிகவும் மகத்தானது.'அரசுத் தேர்வை எப்படி சந்தித்தோம் என்பதை, ஏழை - எளிய மாணவர்களுக்கு ஏன் சொல்லித் தரக்கூடாது என, யோசித்து, 13 ஆண்டுகளுக்கு முன், இலவசமாக பயிற்சி அளித்தேன். உயரதிகாரிகள், நண்பர்கள் உதவினர்; உற்சாகம் தந்தனர்.'ஒரு ஆண்டு கடுமையான உழைப்பு. மாணவர்களும் நன்கு படித்து, தேர்வு எழுதிய, 150 பேரில், 145 பேர் தேர்ச்சி பெற்று, அரசு வேலையில் உள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவ, 'அடுத்த தேர்வுக்கு, எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்...' என்று, அக்கம் பக்க கிராமங்களில் உள்ள ஏழை - எளிய குடும்பத்தைச் சேர்ந்தோர் வேண்டுகோள் வைத்தனர்.'ஆண்டுக்கு ஆண்டு, மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது, 3,500 பேர் படிக்கின்றனர். தொலை துாரங்களில் இருந்தெல்லாம் படிக்க வருகின்றனர்.70 சதவீதம் பேர், பெண்கள்; கட்டணம் எதுவும் கிடையாது. 'சிரமப்படும் மாணவர்களுக்கு, உடை, தேவையான புத்தகங்கள் வாங்கித் தருவது; அவர்கள் தேர்ச்சி பெற்றால், சென்னை சென்று வருவதற்கான, போக்குவரத்து கட்டணம் வழங்குவது போன்றவைகளையும் செய்து வருகிறேன்...' என்றார். மத்திய - மாநில அரசு வேலைக்காக நடத்தப்படும் தேர்வை சந்திப்பது குறித்து, இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வரும், தாசில்தார் மாரிமுத்து, உள்ளபடியே மகத்தான மனிதர் தான்! இவரது அலைபேசி எண்: 98650 56155தாசில்தார் பணிக்கு இடையூறு இல்லாதபடி, மாலை, 6:00 மணிக்கு மேல் பேசலாம்.எல். எம். ராஜ்