உள்ளூர் செய்திகள்

நல்லதையே கேட்போம்!

புண்டரீகன், திருமணம் ஆனவன். திருமணம் ஆனதிலிருந்து, தன் பெற்றோரிடம் பாராமுகமாக இருந்தான்.ஒரு சமயம், புண்டரீகன் இருந்த ஊரில், ஹரிகதா காலட்சேபம் நடந்தது. அதை கேட்க போயிருந்தாள், புண்டரீகனின் மனைவி.கதாகாலட்சேபத்தில், காசியின் பெருமைகளை மிகவும் விரிவாக சொன்னார். அதைக் கேட்ட புண்டரீகன் மனைவிக்கு, உடனே காசிக்கு போக வேண்டும் என்ற ஆசை உண்டானது.அதனால், கதை முடிந்து வீடு திரும்பியவள், 'காசிக்கு போக வேண்டும், ஏற்பாடு செய்யுங்கள்...' என, கணவரை நச்சரித்தாள்.'காசி, இங்கிருந்து எவ்வளவு துாரம் தெரியுமா... அவ்வளவு துாரம் உன்னால் நடக்க முடியுமா... மேலும், வயதான பெற்றோரை தனியே விட்டு விட்டு, நாம் மட்டும் போவது சரியாக இருக்காது...' என்றான்.'எதற்காக அவர்களை விட்டுச் செல்ல வேண்டும்? அவர்களும் நம்மோடு நடந்து வரட்டுமே...' என்றாள், மனைவி.எல்லாருமாக காசிக்கு புறப்பட்டனர்.கொஞ்ச துாரம் போனதும், 'எனக்கு, கால் வலிக்கிறது. இதற்கு மேல் என்னால் நடக்க முடியாது. என்னை துாக்கிச் செல்லுங்கள்...' என்றாள், மனைவி.மனைவியை தோளில் துாக்கிக் கொண்டு நடந்தான், புண்டரீகன். இளம் வயதான அந்த பெண்ணாலேயே நடக்க முடியாது எனும்போது, வயதான பெற்றோரால் நடக்க முடியுமா?ஆகவே, அவர்களையும் ஒரு பலகையில் அமர செய்து, கயிறு கட்டி இழுத்துக் கொண்டு, ஒரு வழியாக காசிக்கு போய் சேர்ந்தான், புண்டரீகன்.இவர்கள் போன நேரம், காசியில், ஹரி கதை சொல்லிக் கொண்டிருந்தார், ஒரு பாகவதர். அன்று அவருடைய ஹரி கதையில், பெற்றோர்களிடம் காட்ட வேண்டிய அன்பையும், ஆதரவையும் பற்றி கூறினார்.'தன் பெற்றோரை கவனிக்காமல், தான் மட்டும் சாப்பிடுகிறவன், கண்டிப்பாக நரகத்திற்கு தான் போவான். உடல் சக்தியிழந்து, அனாதரவாக இருக்கும் பெற்றோரை எவன் அலட்சியம் செய்கிறானோ, அவனும் கண்டிப்பாக கொடிய நரகத்திற்கு தான் போவான்.'பெற்றோரை கவனிக்காமல், பூஜை, தீர்த்த யாத்திரை செய்பவனுக்கு, அவைகளால் ஒரு பலனும் கிடைக்காது...' என்று விவரித்துக் கொண்டிருந்தார், பாகவதர்.அதைக் கேட்ட புண்டரீகனின் மனம் மாறியது. இத்தனை நாளும் தன் பெற்றோரை அலட்சியம் செய்தது தவறு என்று, அவனுக்கு புரிந்தது.உடனே, ஓடி வந்து, 'இவ்வளவு நாட்களாக நான் செய்த தவறுக்கு என்னை மன்னித்து விடுங்கள்...' என்று சொல்லி, பெற்றோர் கால்களில் விழுந்து வணங்கினான்.அன்று முதல், பெற்றோரை தெய்வமாகவே பாவித்து செயல்பட ஆரம்பித்தான்.பெற்றோரிடம் பக்தி கொண்டவர்களில், புண்டரீகனை போல யாருமில்லை எனும் அளவிற்கு உயர்ந்தான்.இந்த கதையில், காசி பற்றி கோள்விபட, மனைவியை காசிக்கு போகத் துாண்டுகிறது; இன்னொரு ஹரி கதை, புண்டரீகனை, பெற்றோரிடம் அன்பு செலுத்த துாண்டுகிறது.நல்லவற்றை படிப்பதால், கேட்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை விவரிக்கும் கதை இது.பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !