உள்ளூர் செய்திகள்

தசரதரின் திருமணம்!

ஏப்., 9 - -- தெலுங்கு புத்தாண்டுதமிழ் புத்தாண்டு அன்று, பஞ்சாங்கம் வாசிப்பது, தமிழகத்தில் வழக்கம். இதுபோல், தெலுங்கு புத்தாண்டு அன்று, ராமாயண சொற்பொழிவு கேட்பது, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களின் வழக்கம்.ராமாயணத்தில், தெரிந்த வரலாறைக் கேட்பதை விட, தெரியாத சம்பவங்களை கேட்பது வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.ராமன், சிவதனுசு வில்லை ஒடித்து, ஜனககுமாரி சீதையை மணம் முடித்தது, அறிந்த கதை. அவரது தந்தையோ, மூன்று திருமணம் முடித்தவர். அத்தனையும், மூத்த மனைவிகளின் சம்மதத்துடன் நடந்துள்ளது.காரணம், முதல் இரண்டு மனைவிகளுக்கும் குழந்தை பாக்கியமில்லை. அரசகுல வழக்கப்படி, அடுத்து நாடாள வாரிசு வேண்டு மென்பதால், இது அக்காலத்தில் அனுமதிக்கப் பட்டது.தசரதரின் முதல் மனைவி கோசலை. நம்மூரில் குத்தாலம், பாபநாசம், மதுரை வீரன் என்றெல்லாம் ஊர் பெயரையே குழந்தைகளுக்கு வைப்பர் இல்லையா! அதுபோல், கோசலை என்ற பெயரும் அவளது ஊர் பெயராலேயே அமைந்தது.கோசல தேசம் என்பது, இன்றைய உத்தரபிரதேசத்தின் வடகிழக்கே, அவாத் என்ற ஊரைச் சுற்றியுள்ள பகுதியாகும். தசரதரின் புகழை அறிந்த ராவணன், அவரது வீரம் மீது பொறாமைப்பட்டு, தனக்கு கப்பம் கட்டும்படி உத்தரவிட்டான்.தசரதர் தன் பாணங்களைத் தொடுத்து, இலங்கையிலிருந்து யாரும் வெளியேற முடியாதபடி செய்து விட்டார்.தோற்றுப் போன ராவணன், இவரே இப்படி என்றால், இவருக்கு பிறக்கும் குழந்தைகளும் வீரம் மிக்கவர்களாகத் தானே இருப்பர் எனக் கருதினான்.எனவே, அவருக்கு குழந்தையே பிறக்கக் கூடாது என்ற வரத்தை, பிரம்மாவிடம் வாங்கி விட்டான். அத்துடன், தசரதருக்கு யாரையும் பெண் கொடுக்க விடாமல் செய்து விட வேண்டுமென நினைத்தான்.இதையடுத்து, அயோத்தி அருகிலுள்ள கோசல நாட்டை சேர்ந்த கோசலையை, தசரதருக்கு திருமணம் செய்ய இருந்த தகவலை அறிந்தான். அவளைக் கடத்தி, பெட்டிக்குள் வைத்து ஆற்றில் மிதக்க விட்டான்.ஓரிடத்தில் கரை ஒதுங்கிய பெட்டியை, அயோத்தி அமைச்சரான சுமந்திரர் கண்டெடுத்து, கோசலையை காப்பாற்றினார். அத்துடன், அவளது தந்தையிடம் பேசி, தசரதருக்கு திருணம் செய்து வைத்தார்.ராவணன் பெற்ற வரத்தின்படி அவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே, காசி மன்னரின் மகளான சுமித்திரயை, மூத்தவள் அனுமதியுடன் திருமணம் முடித்தார். அவர் களுக்கும் குழந்தை இல்லை.ஒருமுறை கேகய நாட்டுக்குச் சென்ற தசரதர், அந்நாட்டு இளவரசி கைகேயியைப் பார்த்தார். கேகயம் என்பது, தற்போதைய பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானை ஒட்டி இருந்த பகுதி என்று சொல்வர். அப்போது, நம் தேசம், பரத கண்டமாக பிளவுபடாமல் இருந்தது.கைகேயியின் தந்தை, தன் மகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்குத் தான் பட்டம் சூட்ட வேண்டும் என்று நிபந்தனை விதிக்க, அனைவரும் அதை ஏற்றனர். ஆக, கைகேயிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது.யாருக்கும் குழந்தை இல்லை என்ற நிலையில், ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் புத்திர காமேஷ்டி யாகம் நடத்த, அனைவரும் குழந்தை பெற்றனர்.தெலுங்கு புத்தாண்டில், இப்படி ஒரு விசேஷமான வரலாறைத் தெரிந்து கொண்டதே புண்ணியம் தானே! தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !