போட்டி மனப்பான்மை எதில் கூடாது?
தமிழகத்தின் கல்வி அறிவு அபாரம். படித்தவர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். மேற்கல்வி பயின்றவர்கள், 48 சதவீதம் என்கின்றனர்; பெருமையாக இருக்கிறது.ஆனால், ஒரு செய்தி நினைவுக்கு வரும்போது வருத்தமாக உள்ளது. ஏன் இப்படி மெத்தப் படித்த மாநிலக்காரர்களே, சாலை விதிகளை பின்பற்றாதவர்களாக இருந்து, கொத்து கொத்தாய்ப் பலரும் மரணிக்கக் காரணமாக இருக்கிற அளவுக்கு ஓட்டுகின்றனர்? புரியாத புதிர்!சாலை விபத்துகளுள் பெரும்பாலும் எப்படி நடக்கின்றன தெரியுமா? நேருக்கு நேர் மோதிக் கொள்வதால்! இதற்கு என்ன காரணம் என்றால், ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முந்துவதில், ஓட்டுனரின் கணக்கு தவறாக போய் விடுவது தான்.எந்த வாகனத்தை ஒருவர் முந்த நினைக்கிறாரோ, அந்த வாகனத்தை ஓட்டுகிறவர், 'என்னையா முந்தப் பார்க்கிறாய்?' என்று ஆக்சிலேட்டரை அழுத்துகிறார். எதிரே ஒரு வாகனம் வருகிறது அல்லவா? அந்த வாகனத்தை ஓட்டுகிறவரும், 'இந்த இடைவெளியில் முந்தப் பார்க்கிறாயா... உனக்கு இடம் தர மாட்டேன்...' என்று அவரும் தன் பங்கிற்கு ஆக்சிலேட்டரை அழுத்த, இந்த மூன்று தவறுகளும், பல நேரங்களில் ஒன்றும் நேர்ந்து விடாமல் சரியாகி விட, சில நேரங்களில் கோர விபத்துகளாக மாறி விடுகின்றன.எனவே, போட்டி உணர்வு சாலையில் நல்லதல்ல என்பது தான், நான் கூற விரும்பும் முதல் செய்தி.என் தந்தை தமிழ்வாணன், 'ஓட்டப் பந்தயத்தில் தனி ஒருவன் ஓடினால், அவனது ஓட்டம் சாதனைப் புத்தகத்தில் பதிவு பெறாது. அவனே பலருடன் ஓடினால் தான், அவனுக்கு இவர்களை எல்லாம் முந்த வேண்டும் என்ற வேகமும், வெறியும் வரும். இது தான் சாதனையாக முடியும்...' என்று கூறுவார்.படிப்பிலும் போட்டி உணர்வு தேவை தான். 'தான் பெற்ற முதல் இடத்தை இழந்து விட கூடாது...' என்று, முதல் ரேங்க் மாணவனும், 'உன் இடம் நிரந்தரமல்ல, அதை எனக்கு சொந்தமாக்குகிறேன்...' என்று இரண்டாம் ரேங்க் மாணவனும், போட்டி போட தான் வேண்டும்; தவறே இல்லை.ஒரு வீட்டில், நான்கு மாப்பிள்ளைகள்... அவர்களில் ஒருவர், 'என் மூன்று மூத்த சகலைகள் பொருளாதாரத்தில் எங்கோ இருக்க, நான் மட்டும் பின்தங்கி விட்டேன். இதனால், எனக்கு மாமனார் வீட்டில் மரியாதை போதவில்லை...' என்றார்.'பொருளாதாரப் போட்டியில், ஓரிடமாவது முந்தப் பாருங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை. 'பணமிருந்து என்ன செய்ய! ஒரு மட்டுமரியாதை, உதவிகள், பேசுகிற தன்மை, தரம், பழகுகிற விதம் ஆகிய விஷயங்களில், நம்ம கடைசி மாப்பிள்ளை மாதிரி வராது...' என்று உங்கள் மாமியார், மாமனார் பேசும்படியாவது நடந்து கொள்ளுங்கள்...' என்றேன்.'என் பொருளாதார சக்தி என்ன தெரியுமா... அதை உனக்கு காட்டுகிறேன் பார்...' என்று, வெறித்தனமாக இறங்குவது, ஒருபோதும் ஆரோக்கியமான போட்டியாக இருக்க முடியாது. இது பொறாமையுணர்வு.மற்றவர்களை பார்த்து, அது போலவே செய்வது, போட்டியிலிருந்து விலகிப் போய்விடும் தன்மை கொண்டதாகும். சாலையிலிருந்து விலகும் வாகனம் என்ன ஆகும்? மரத்தில் முட்டி, உருத்தெரியாமல் ஆகிவிடும்.போட்டி உணர்வு சரியான திசையில் செலுத்தப்படாவிட்டால், அது பொறாமையில் போய் முடிந்து, ஏட்டிக்குப் போட்டியாக மாறி, உறவுச் சீர்கேட்டில் முடிகிறது.இந்த ஏட்டிக்குப் போட்டி, மெல்ல நகர்ந்து, பழிவாங்குதலில் கொண்டுபோய் இறக்கிவிட்டு விடுகிறது. இதை விட ஆபத்தான செயல் வேறு இல்லை.லேனா தமிழ்வாணன்