| ADDED : செப் 19, 2026 02:25 AM
பெங்களூரு: ''ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதையில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,'' என, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்து உள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது: பெங்களூரில் கடந்த இரண்டு மாதங்களில், 1,373 கி.மீ., துார நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதையை, தெருவோர வியாபாரிகள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யும் வியாபாரிகளுக்கு அபராதம் விதியுங்கள். அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யுங்கள். போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்றும் பணிகள் வேகப்படுத்தப்படும். இந்த வாகனங்களை ஏலம் விடுவது குறித்து ஆலோசிக்கப்படும். 'பிரிடம் ஆப் வேஸ்ட்' என்ற இயக்கத்தின் மூலம், பெங்களூரின் ஐந்து மாநகராட்சிகளிலும், இதுவரை, 5,268 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.