அரசியல் அமைப்பை அழிக்க பிரதமர் மோடி முயற்சி: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
பெங்களூரு: ''அரசியல் அமைப்பை அழிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார்,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.காங்கிரஸ் அரசின் இரண்டு ஆண்டு சாதனை மாநாடு, முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில் உள்ள மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஐந்து வாக்குறுதி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தொழில் நிறுவனங்கள் கர்நாடகாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.சித்தராமையா நிதி அமைச்சராக இருக்கும்போது எல்லாம், அரசின் கருவூலத்தில் லட்சுமி இருப்பார். பா.ஜ., ஆட்சிக்காலத்தில் கருவூலத்தில் இருக்கும் லட்சுமி ஓடிவிடுவார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் பிரதமர் மோடி, இதுவரை ஏன் மணிப்பூர் செல்லவில்லை?பா.ஜ., வீழ்ச்சி அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. அரசியல் அமைப்பை அழிக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.முதல்வர் சித்தராமையா பேசியதாவது:எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக உள்ளேன். மேம்பாட்டுப் பணிகளை பார்த்து அவர்களுக்கு பொறாமை. ம.ஜ.த.,வால் ஒருபோதும் தனித்து ஆட்சிக்கு வர முடியாது. குமாரசாமிக்கு, எங்கள் அரசை விமர்சிக்க தகுதி கிடையாது.நம் மாநிலத்திற்கு இழைக்கப்படும் அநீதியை, பிரதமர் மோடியிடம் கேட்க குமாரசாமி, பிரஹலாத் ஜோஷி, சோமண்ணா, ஷோபா உட்பட யாருக்கும் தைரியம் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''நாங்கள் அமல்படுத்தும் வாக்குறுதி திட்டங்களை, பீஹார் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி நகல் எடுத்துள்ளது,'' என குற்றஞ்சாட்டினார்.
சிவா பெயரை கூற மறுப்பு
முதல்வர் சித்தராமையா பேச ஆரம்பித்தபோது, பெங்களூரில் அவசர வேலை இருப்பதாக கூறிவிட்டு, துணை முதல்வர் சிவகுமார் மேடையில் இருந்து புறப்பட்டார். தலைவர்களை வரவேற்று, அவர்களின் பெயரை கூறியபோது, சிவகுமார் பெயரை கூறாமல் சித்தராமையா விட்டுவிட்டார்.பக்கத்தில் இருந்த ஒருவர், சிவகுமார் பெயரை ஞாபகப்படுத்தினார்.“மேடையில் இருப்பவர்கள் பெயரைத் தான் கூறுவேன், வீட்டிற்கு சென்றவர்கள் பெயரை குறிப்பிட மாட்டேன்,” என, சித்தராமையா ஆவேசப்பட்டார்.சிவகுமார் பாதியில் புறப்பட்டுச் சென்றதால், அவருக்காக கூட்டத்திற்கு வந்தவர்களும் பாதியில் கலைந்து சென்றனர்.இதேபோல மேடையில் சித்தராமையா அமர்ந்திருக்கும்போது, அவரது காதில் அடிக்கடி அமைச்சர் மஹாதேவப்பா ஏதோ ரகசியம் பேசினார். அவரை, கார்கே, எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசும்படி கண்டித்தார்.