மேலும் செய்திகள்
அதானி குழுமம் ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு
13 minutes ago
குன்னுார்: 'நீலகிரி பசுந்தேயிலைக்கு ஆதார விலை கிலோவுக்கு, 40 ரூபாய் நிர்ணயிக்க செய்ய வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுாரை தலைமையிடமாக கொண்டு மாநில அரசின், 'இன்கோசர்வ்' நிறுவனத்தின் கீழ், 16 தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. 25 ஆயிரம் விவசாயிகள், பசுந்தேயிலை வினியோகம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் மழையின் காரணமாக தேயிலை உற்பத்தியும், நுகர்வுக்கான தேவையும் அதிகரித்ததால் விலை ஏற்றம் கண்டது. தற்போது மீண்டும் உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது. விலையில், ஏற்றம் இல்லாமல் சீரான நிலையில் உள்ளது. ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான உற்பத்தி செலவு, 25 ரூபாய்க்கு மேல் ஆகிறது. ஆனால், 15 ரூபாய் மட்டும் விலை வழங்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்ட சிறு, குறு நிறுவனங்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது: கூட்டுறவு தொழிற்சாலைகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கான விலை வீழ்ச்சி நீடித்து வருகிறது. விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண, டாக்டர் சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி, பசுந்தேயிலை கிலோவுக்கு, 40 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசு, சிறு தேயிலை விவசாயிகளுக்கு சில மானியம் வழங்கி வருவது, தற்போதைய சூழ்நிலையில் போதுமானதாக இல்லை. மூன்று மாதங்களுக்கு முன், சிறு தேயிலை விவசாயிகள் குழுவினர், மத்திய வர்த்தக துறை இணையமைச்சர் முருகன் உதவியால், டில்லியில் மத்திய வர்த்தக துறை இணை அமைச்சரை சந்தித்தபோது, தீர்வு காண்பதாக உறுதியளித்தார். விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
13 minutes ago