| ADDED : ஜூன் 02, 2024 05:48 AM
பெங்களூரு: பெங்களூரில் சாலை ஓரம், பூங்கா அருகில், மழைநீர் கால்வாய், காலி வீட்டுமனைகள், பஸ் நிலையம், விளையாட்டு மைதானங்கள் என, கண்ட கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதால், நகரின் அழகு பாழாகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்த நடவடிக்கை பலனளிக்கவில்லை.பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு பாடம் புகட்டும் நோக்கில், 2019ல் அபராதம் என்ற அஸ்திரத்தை பிரயோகித்தது. குப்பை கொட்டுவோரை கண்காணிக்க மார்ஷல்கள், சுகாதார அதிகாரிகள், பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 'சாலையில் குப்பை போடாதீர்கள். குப்பை வாகனங்களில் போடுங்கள்' என, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுகின்றனர்.பொது இடங்களில், குப்பை கொட்டியது தொடர்பாக 2019 முதல் இதுவரை 11.88 லட்சம் வழக்குகள் பதிவு செய்து, 30.85 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. எனும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை, மக்கள் நிறுத்தவில்லை. இரவு நேரத்தில் கார், பைக்குகளில் பிளாஸ்டிக் கவர்களில் குப்பையை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.