உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோட்டா வென்றால் தேர்தல் ரத்து? தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்!

நோட்டா வென்றால் தேர்தல் ரத்து? தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்!

புதுடில்லி :தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்கள், நோட்டா எனப்படும் 'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்ற பட்டனை தேர்வு செய்யும் முறை கடந்த 2013 முதல் அமலில் உள்ளது.

பொதுநல மனு

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அந்த ஆண்டு நடந்த தேர்தலில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், நோட்டா பட்டன் பொறுத்தப்பட்டது. ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களை விட, நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், அதற்கு அடுத்தபடியாக உள்ள வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்ற விதிமுறை தற்போது உள்ளது. இதனால், ஒரு தொகுதி யில் அதிகப்படியான ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்திருந்தால், அங்கு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள், சமீபகாலமாக வலுத்து வருகின்றன. இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், பிரபல எழுத்தாளருமான ஷிவ் கெரா, நோட்டா தொடர்பாக பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், 'ஒரு தொகுதியில் அதிகப்படியான ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவாகியிருந்தால், அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து, அங்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.'அது மட்டுமின்றி, அந்த தொகுதியில் நோட்டாவை விட குறைவான ஓட்டுகள் பெற்ற வேட்பாளர்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷிவ் கெரா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறியதாவது:நாடு முழுதும் லோக்சபா தேர்தல் நடந்து வரும் சூழலில், குஜராத் மாநிலம் சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

உரிமை

இதைத் தொடர்ந்து, மற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால், பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்தலில் தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களது உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க, தேர்தல்களில் மற்ற வேட்பாளர்களுக்கு இணையாக நோட்டாவையும் ஒரு வேட்பாளராக கருதி, விளம்பரப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட தேர்தலில் ஒரு தொகுதியில், வேட்பாளர்களைக் காட்டிலும் நோட்டா அதிக ஓட்டுகள் பெற்றால், அந்த தேர்தல் செல்லாது என, அறிவிக்க வேண்டும் அல்லது அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் நோட்டாவை ஒரு கற்பனை வேட்பாளராக கருதுவது குறித்து, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அவ்வாறு கற்பனை வேட்பாளராக நோட்டா அறிவிக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் நேர்மையான, சிறந்த வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தும்.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தன் உத்தரவில், 'இது தேர்தல் நடைமுறை பற்றிய வழக்கு. எனவே, இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும். 'இது குறித்து பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

lana
ஏப் 27, 2024 09:58

வரவேற்க வேண்டும்


சந்திரசேகர்
ஏப் 27, 2024 07:51

நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்தால் ஏன் மறு தேர்தலை நடத்த வேண்டும். மீண்டும் ஒரு கட்சி வேட்பாளரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும். மீண்டும் செலவு வேண்டும். யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லாமல் தான் மக்கள் நோட்டாவுக்கு ஓட்டு போடுகிறார்கள். ஆகவே அந்த தொகுதியில் அடுத்த ஐந்து ஆண்டுக்கு அந்த பகுதி கலெக்டர் நிர்வாகம் நடத்தலாம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 27, 2024 20:42

கலெக்டர்கள் ஆளுங்கட்சி சாதகமாக நடக்க வேண்டிய நிலை ஏற்படும் எந்த கலெக்டருக்கும் சுயமாக முடிவெடுக்கும் தைரியம் இல்லை அப்படியே இருந்தாலும் அடுத்த நிமிடமே தண்ணீர் இல்லா காட்டில் கலெக்டராக இருக்க வேண்டியது தான் நோட்டா வென்றால் அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு ஏற்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அல்லது வாபஸ் வாங்கிக் கொண்ட அனைத்து வேட்பாளர்களும் இனிமேல் வரும் அனைத்து தேர்தலில்களும் வேட்புமனு எந்த தொகுதியிலும் தாக்கல் செய்யவோ வேட்பாளர்களாக நிற்கவோ தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிற்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் அவர்களது வோட்டு உரிமையும் நிரந்தரமாக பறிக்கபட வேண்டும்


Kasimani Baskaran
ஏப் 27, 2024 06:34

வெறுமனே நோட்டா என்று ஓட்டுப்போட்டு வீட்டுக்கு சென்று விடுவதால் ஒன்றும் நடக்காது ஏன் போட்டார் என்ற கேள்வி கேட்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லை என்றால் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதே நோட்டாவின் நோக்கம் என்றாகிவிடும் நீதிமன்றம் கூட தன் கடமையை உணர்ந்து குற்றவாளிகள் போட்டியிட முடியாமல் செய்வது நாட்டுக்கு நல்லது தற்பொழுதுள்ள சட்டத்தின் படி ஒருவர் குற்றவாளி என்பதை ஓராண்டுக்குள் நீதிமன்றம் வழக்கு நடத்தி முடிவு சொல்ல வேண்டும் - ஆனால் நீதிமன்றம் அப்படி ஒரு சட்டம் இருப்பதாகவே காட்டிக்கொள்வது இல்லை தேசத்தின நலன் முக்கியம் என்றால் எதற்கெடுத்தாலும் மனுக்கொடுப்பவர்களிடமிருந்து மனுக்களை வாங்காமல் வாரத்தில் மூன்று நாள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நடத்தில் அனைத்து வழக்குகளையும் பைசல் செய்யலாமே ஏன் செய்யவில்லை?


மேலும் செய்திகள்