| ADDED : மே 11, 2024 12:51 AM
லக்னோ, உத்தர பிரதேசத்தில், வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிய 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், பா.ஜ., வேட்பாளர் சஷாங்க் மணி திரிபாதி, 54, ஓட்டமாக ஓடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். உத்தர பிரதேசத்தின் தியோரியா லோக்சபா தொகுதிக்கு கடைசி கட்ட மான ஜூன் 1ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியுடன் நிறைவடைந்தது. பா.ஜ., சார்பில், சஷாங்க் மணி திரிபாதி முதன்முறையாக போட்டியிடுகிறார். மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான இவர், ஐ.ஐ.டி.,யில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில், கடைசி நாளான நேற்று முன்தினம் சஷாங்க் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. அன்றைய தினம் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில், உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி துவங்க தாமதமானதை அடுத்து, சஷாங்க் அதை முடித்துக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வர தாமதம் ஆனது. வழியில் ஏராளமான ஆதரவாளர்கள் வழிமறித்து அவருடன் பேசியதால் இன்னும் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விரைந்து வந்த சஷாங்க், 100 மீட்டர் துாரத்துக்கு ஓட்டமும் நடையுமாக வியர்க்க விறுவிறுக்க வந்து கடைசி நிமிடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அவருடன், உ.பி., மாநில பா.ஜ., தலைவர் பூபேந்தர் சிங்கும் ஓடி வந்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை அங்கு சில நிமிடங்களுக்கு பரபரப்பு நிலவியது.