உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிவி பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவர் மயங்கி சரிந்து விழுந்தார்

டிவி பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவர் மயங்கி சரிந்து விழுந்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்த 56 வயதான நபர், வீட்டில் டீ அருந்தியபடி, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ நகைச்சுவை காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர், சிரிப்பை அடக்க முடியாமல், வாய்விட்டு சிரித்தார்.ஒரு சில நிமிடங்களுக்கு தொடர்ந்து சிரித்தபடி இருந்தவரின் கைகளில் இருந்த டீ கோப்பை கீழே விழுந்தது. அடுத்த நொடியே அவரது உடல் ஒரு பக்கமாக சாய்ந்து நாற்காலியில் இருந்து கீழே விழுந்து மயக்கமானார்.இதை பார்த்த அவரது மகள் பதற்றத்துடன் தந்தையை எழுப்பினார். அவரோ சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். உடனே ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் போதே அந்த நபர் கண் திறந்து பார்த்து, பேச துவங்கினார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை கண்டறிந்தனர். ஆனால், அவர் திடீரென சுயநினைவு இழந்தது ஏன் என்பதை ஆராய, அந்த நபரை நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமாரிடம் அனுப்பினர். அவரை பரிசோதித்த டாக்டர் சுதிர் குமார், அந்த நபர் அதீத சிரிப்பால் மயக்கம் அடைந்ததை கண்டறிந்தார். இது பற்றி டாக்டர் சுதிர் கூறியதாவது:அந்த 56 வயது நபருக்கு எவ்வித மருத்துவ குறைபாடும் இல்லை. நல்ல ஆரோக்கியமாகவே உள்ளார். எதற்காகவும் அவர் மருந்து உட்கொள்பவராகவும் இல்லை. அதீதமான சிரிப்பால் ஏற்படும், 'சின்கோப்' எனப்படும் தற்காலிக நினைவு இழப்பு அவருக்கு ஏற்பட்டுஉள்ளது. அவருக்கு மருந்துகள் அளிக்கவில்லை. இதய பரிசோதனை மட்டும் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளோம். மற்றபடி அதீதமான சிரிப்பு, நீண்ட நேரம் நிற்பது, கடினமான உடல் உழைப்பு போன்றவற்றை தவிர்க்கும்படி கூறினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

சிரிப்பால் மயக்கம் ஏன்?

அடக்க முடியாமல் அதீதமாக சிரிப்பதால் ஏற்படும் தற்காலிக நினைவு இழப்பை, 'லாப்டர் இண்ட்யூஸ்டு சின்கோப்' என்று அழைக்கின்றனர். இது ஒரு அரிதான குறைபாடு. ஒருவர் அதீதமாக சிரிக்கும்போது ரத்த அழுத்தம் மிக வேகமாக குறையும். அப்போது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் திடீரென குறைவதால் நினைவு தவறுகிறது. ரத்த ஓட்டம் சீரானதும் மீண்டும் நினைவு திரும்புகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R S BALA
ஜூன் 04, 2024 18:37

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்றுதான் கேள்விப்பட்டுஇருக்கோம் இதென்ன தலைகீழா இருக்கு...


Rajamani
ஜூன் 09, 2024 10:25

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.


Radhakrishnan Seetharaman
ஜூன் 03, 2024 23:43

மர்ம நபருக்கு மர்ம நோய்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை