புதுடில்லி: இந்தியாவில் இருந்து ஓமனுக்கு பயணிக்க இருக்கும் இன்ஜின் இல்லாத 'ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா' கப்பல் குழுவினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பண்டைய காலங்களில் கப்பல் கட்டும் முறை வியக்கத்தக்க வகையில் இருந்தது. குறிப்பாக இந்தியா, அரேபியா, கிழக்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் 'தையல் முறை' கப்பல்கள் அப்போது பிரபலமாக இருந்தன. இவை பாய்மரக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன. கி.பி., 5ம் நுாற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த பாய்மரக் கப்பலின் வரலாற்று சிறப்பை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில், அதே பண்டைய தொழில்நுட்பத்துடன் ஒரு பாய்மரக் கப்பலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பம்:
ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் நவீன காலத்து கப்பலில் இருக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இன்ஜின் இல்லாமல் முழுக்க முழுக்க பாய்மர தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் சிறப்பு என்னவெனில் மரப்பலகைகளை ஆணிகள் மூலம் இணைக்காமல், தேங்காய் நார் மற்றும் இயற்கை இழைகளால் இணைத்துள்ளனர். அஜந்தா குகை ஓவியங்களில் காணப்படும் பாய்மரக் கப்பலை போலவே, இந்த கப்பலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டைய கால நுால்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எழுதி வைத்த குறிப்புகளையும் பின்பற்றி இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளனர். அதாவது 1,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்தை அப்படியே இந்த காலத்திற்கு நகல் எடுத்துள்ளனர். நாகரிகம்:
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா பாய்மரக் கப்பல் நம் நாட்டின் பண்டைய வர்த்தக நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மேற்காசிய நாடான ஓமன் கடற்கரை வரை தன் பயணத்தை துவக்கியுள்ளது. இந்தியாவுக்கான ஓமன் துாதர் இசா சலே அல் ஷிபானி முன்னிலையில், நம் மேற்கு கடற்படை தளபதி துணை அட்மிரடல் கிருஷ்ணா சுவாமிநாதன் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார். பண்டைய கால நாகரிகத்துடன் பயணிக்கும் பாய்மரக் கப்பல் குழுவினருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாய்மர கப்பலின் சிறப்புகள்
* கி.பி., 5ம் நுாற்றாண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தையல் பாய்மரக் கப்பல் தான் ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா * கப்பலுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க இயற்கை பிசின்கள், பருத்தி மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இந்திய கடற்படையைச் சேர்ந்தது என்றாலும் போர்க்கப்பல் அல்ல * இக்கப்பல் 64 அடி நீளமும், 21 அடி அகலமும் கொண்டது. உலோகத்தை தவிர்க்கும் 'டன்காய்' எனும் பாரம்பரிய இந்திய முறையை பின்பற்றுகிறது * இதை, கேரளாவைச் சேர்ந்த முதன்மை கப்பல் கட்டும் வல்லுநர் பாபு சங்கரன் தலைமையிலான பாரம்பரிய கைவினைஞர்கள் குழு உருவாக்கியுள்ளது. இதன் நிலைத்தன்மையை உறுதிசெய்ய சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தால் ஆய்வுகள் நடத்தப்பட்டன * இக்கப்பலில் கடம்ப வம்சத்தின் இருதலை பறவையான கண்டபெருண்டா, பாய் மரங்களில் சூரியன் சின்னங்கள், கப்பலின் முகப்பில் சிம்ம யாழி சிலை, ஹரப்பா காலத்து கல் நங்கூரம் போன்ற இந்தியாவின் கடல்சார் வரலாற்றைக் குறிக்கும் பல்வேறு சின்னங்கள் இடம் பெற்றுள்ளன * இக்கப்பல் கட்டும் திட்டம், இந்திய கடற்படை மற்றும் 'ஹோடி இன்னோவேஷன்ஸ்' அமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் வாயிலாக, கலாசார அமைச்சகத்தின் நிதியுதவியுடன் 2023ல் துவங்கியது * கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கப்பல், மே மாதம் கர்நாடகாவின் கார்வாரில் கடற்படையில் முறையாக இணைக்கப்பட்டது.
ஓமன் பயணம் ஏன்?
இந்தியா முதல் ஓமன் வரையிலும், அங்கிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலும் உள்ள வழித்தடம் ஒரு காலத்தில் முக்கிய வர்த்தக பாதையாக இருந்தது. இந்திய வணிகர்களும் மாலுமிகளும் இந்த கடல் வழிகளை பயன்படுத்தி மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் மசாலாப் பொருட்கள், துணிகள் உள்ளிட்டவைகளை வர்த்தகம் செய்தனர். இந்த வழியில் மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா இந்தியாவின் பண்டைய கடல்சார் நினைவுகளை மீட்டு கொண்டு வந்துள்ளது.
கவுண்டின்யா- பெயர் ஏன்?
கி.பி., முதலாம் நுாற்றாண்டில் வாழ்ந்த இந்திய மாலுமியான கவுண்டின்யா என்பவரின் நினைவாக இக்கப்பலுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் சீன குறிப்புகளின்படி, இவர் தென்மேற்கு வியட்நாமில் உள்ள மேகாங் டெல்டாவுக்கு பயணம் செய்து, இளவரரசி சோமாவை திருமணம் செய்து கொண்டு, இன்றைய கம்போடியாவின் புனான் பேரரசை நிறுவ உதவினார். உலகளாவிய வரலாற்று தாக்கத்தை ஏற்படுத்திய முதல் இந்திய மாலுமியாக இவர் கருதப்படுகிறார்.