உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவுதி அரேபியா விபத்தில் 45 இந்தியர் பலி

சவுதி அரேபியா விபத்தில் 45 இந்தியர் பலி

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே, பஸ் - டேங்கர் லாரி மோதி தீப்பிடித்த விபத்தில், 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்ட இவர்கள் அனைவரும் ஹைதராபாதை சேர்ந்தவர்கள். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 54 பேர், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றனர். மெக்காவில் இருந்து மதீனாவுக்கு நேற்று முன்தினம் இரவு, 46 பேர் பஸ் மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர். மதீனாவிலிருந்து 25 கி.மீ. தொலைவில், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியும், இந்த பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில், பஸ் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

புனித பயணம்

இந்த விபத்தில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பி, சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 45 பேரும் உயிரிழந்து விட்டதாக, சவுதி அரேபியா போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜானர் கூறியதாவது: ஹைதராபாதில் இருந்து 54 பேர் 9ம் தேதி ஜெட்டா சென்றனர். அவர்கள் 23ல் நாடு திரும்புவதாக இருந்தது. மதீனாவுக்கு நான்கு பேர் காரில் சென்றனர். நான்கு பேர் மெக்காவிலேயே தங்கி விட்டனர். 46 பேர் பஸ்சில் சென்றபோது விபத்து நடந்தது. ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு கமிஷனர் கூறினார். அதிகாலை என்பதால், அனைவரும் துாங்கி கொண்டிருந்ததால் தப்பிக்க முடியவில்லை. இறந்தவர்களில் 11 பெண்கள், 10 குழந்தைகள் அடங்குவர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவ ரியாத்தில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துாதரக அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. விபத்து குறித்து பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்; அமைச்சர் அசாருதீன் தலைமையிலான குழு சவுதி செல்கிறது என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்து என்பதால், உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை தேவைப்படலாம்; பெரும்பாலான உடல்கள் சவுதி அரேபியாவிலேயே அடக்கம் செய்யப்படும் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

ஒரே ஒரு அதிர்ஷ்டசாலி

விபத்தில், முகமது அப்துல் ஷோயப், 24, என்ற இளைஞர் மட்டும் தப்பியுள்ளார். இவர், டிரைவர் அருகே அமர்ந்து இருந்தார். துாக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததால், காயத்துடன் தப்பினார். ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை சேர்ந்த 18 பேர் பலியானது, நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. முஷீராபாத் ராம் நகரை சேர்ந்த ஷேக் நசிருதீன்,65, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். மனைவி அக்தர் பேகம், 60, மற்றும் மகன் மகள்கள், பேர குழந்தைகள் என 18 பேர் புனித பயணம் சென்றனர். விபத்தில் ஒருவர் கூட மிஞ்சவில்லை. உயிரிழந்த 18 பேரில் ஒன்பது பேர் குழந்தைகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை