| ADDED : ஜன 24, 2024 05:53 AM
கலபுரகி : கலபுரகி வாடி நகரில் பதற்றம் நிலவுவதால், ராமர் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, கலபுரகி மாவட்டம், வாடி நகரில் நேற்று முன்தினம் இரவில், ராமர் உற்சவ சமதியினர் ராமர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.நகரின் பஸ் நிலையம் அருகே ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது, ஒரு ரெஸ்டாரன்ட் திறந்திருந்தது. உள்ளே நுழைந்த சிலர், கட்டாயப்படுத்தி மூடுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.சிறிது நேரத்தில் குறிப்பிட்ட மததத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குவிந்தனர். அவர்கள் கற்கள் வீசியதாக கூறப்படுகிறது. சூழ்நிலை மோசமடையும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, இரு மதத்தைச் சேர்ந்தவர்களையும் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர்.அத்துடன் ராமர் சிலை ஊர்வலம் தொடர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. நகர் முழுதும் எங்குமே ராமர் ஊர்வலம் நடத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை காலை 6:00 மணி வரை வாடி நகரம் முழுதும், சித்தாபூர் தாசில்தார் சையத் பாஷா, 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.போலீசார் சம்பவ இடத்தில் அதிக அளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.