உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியது.....

அதிகம் செலவழித்து பொறியில் கல்லூரியில் சேர முடியாதவர்களுக்கு, அதற்கான சரியான மாற்றுவழி ஒன்று உள்ளது. அதுதான் பாலிடெக்னிக். பாலிடெக்னிக் படித்து டிப்ளமோ பட்டம் பெற்ற மாணவர்கள், நல்ல சம்பளத்தில், நல்ல வேலைகளில் இருப்பதை பரவலாக நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய இந்திய கல்வி உலகில், பாலிடெக்னிக்குகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பாலிடெக்னிக்குகள் என்றால்..... ஒரு மாணவரின் நடைமுறை மற்றும் தொழில்நுட்பத் திறமையை வளர்க்கும் விதமாக, தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை வழங்கும் கல்வி  நிறுவனம் பாலிடெக்னிக். இந்தியாவில், பாலிடெக்னிக்குகள் என்பவை, மாநில அரசுகள் மற்றும் தனியார்களால் நடத்தப்படுகின்றன. தனியார் பாலிடெக்னிக்குகளைப் பொறுத்தவரை, அரசு உதவிப் பெறுபவை மற்றும் சுயநிதி என்ற 2 பிரிவுகள் உள்ளன. ஒரு மாணவர், 10ம் வகுப்பை முடித்தவுடன், பாலிடெக்னிக் படிப்பில் சேரலாம். உதாரணமாக, பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், பொதுமக்கள் தொடர்பு(Mass Communication), உள்அலங்காரம் மற்றும் ஹோட்டல் மேலாண்மை போன்ற பலவித படிப்புகள் 1 வருடம் முதல் 4 வருடங்கள் வரையான கால அளவைக் கொண்டவை. நடைமுறை திறன் மேம்பாடு மற்றும் உடனடி பணி வாய்ப்பு என்று வரும்போது, பாலிடெக்னிக் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. பாலிடெக்னிக் எந்தளவிற்கு பிரபலம் வாய்ந்தது? பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் சூழலிலும், பலவிதமான கல்வி நிறுவனங்கள் முளைத்து பலவிதமான படிப்புகளை வழங்கி வரும் நிலையிலும், பாலிடெக்னிக் படிப்புதான் சிறந்தது என்று சொல்வது கடினம்தான். சிறப்புத்தன்மை மற்றும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, பாலிடெக்னிக் பட்டதாரிகள் பணிசெய்கிறார்கள். உதாரணமாக, ஒரு பாலிடெக்னிக் பட்டதாரி, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் இடத்தில் பணிபுரிபவராக இருக்கிறார். அதேசமயம், ஒரு B.Tech பட்டதாரி, அதே பணியின் திட்டமிடுதல், பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பில் ஈடுபடுகிறார். ஆனால், இந்த B.Tech படிப்பு அதிக செலவு வாய்ந்தது மற்றும் அதிக காலஅளவையும் கொண்டது. பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேசமயம், பொறியியல் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக, கிராமப்புற மாணவர்கள், அதிக செலவும், காலமும் கொண்ட பொறியியல் படிப்பைவிட, பாலிடெக்னிக் படிப்பை தேர்வு செய்கின்றனர். வேலை வாய்ப்புகள் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு, ஆரம்பத்தில் குறைந்த வருமானத்தில்தான் வேலை கிடைக்கிறது. ஆனால், பணி அனுபவம் பெற்ற பிறகு அவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதிய விகிதங்கள் உயர்கின்றன. பாலிடெக்னிக் பட்டதாரிகளை மட்டுமே பணிக்கு அமர்த்தும் பல நிறுவனங்கள் உள்ளன. பாலிடெக்னிக் பட்டதாரிகள் பலர், வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை செய்வதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். பல பாலிடெக்னிக் கல்லூரிகளில், பல பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. ஆரம்பநிலை பணி அனுபவங்களுக்குப் பிறகு, பெரிய நிறுவனத்தில் பணிக்கு சேரும் பல பாலிடெக்னிக் பட்டதாரிகளும் உண்டு. ஆசிரியப் பணி பல பாலிடெக்னிக் கல்லூரிகள், தங்களுக்கான தரமான ஆசிரியர்களை பணியமர்த்துவதில் சிரமப்படுகின்றன. இந்த சிக்கலைத் தீர்க்க, தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(AICTE), தர மேம்பாட்டு திட்டத்தை(Quality Improvement Programme) அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பாலிடெக்னிக் ஆசிரியர்கள், சில தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், தேவையானப் பாடப்பிரிவுகளில் ME, M.Tech மற்றும் Ph.d படிப்புகளை மேற்கொள்ளலாம். மேலும், பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சம்பளமும் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதர கல்லூரி ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில், பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மிகவும் குறைந்தளவே ஊதியம் பெறுகின்றனர். ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அவர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. மேலும், முதுநிலை பொறியியல் படிப்போ அல்லது முனைவர் பட்டமோ பெற்றாலும்கூட, அதனால் எந்த ஊதிய சலுகையும் கிடைப்பதில்லை. பொதுவாக, தனக்கு முறையான ஊதியமோ அல்லது மற்ற ஆசிரியர்களுக்கு கிடைப்பதுபோன்ற சலுகையோ கிடைப்பதில்லை என்று ஒரு ஆசிரியர் நினைக்க ஆரம்பித்து, அதனால் மனவெறுப்பு அடைந்தால், அதனால் பாதிக்கப்படுவது நிச்சயம் மாணவர்கள்தான் என்பது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. தற்போதைய நிலை இன்றைய சமூகத்தில், BE, B.Sc, B.Com, BBA மற்றும் LLB போன்ற படிப்புகளைப் படித்தால்தான் மதிப்பு என்றும், பாலிடெக்னிக் போன்ற தொழில்துறை படிப்புகளுக்கு மரியாதை மற்றும் ஊதியம் குறைவு என்று நினைப்பதால், நாட்டிற்கு தேவையான தொழில்துறை மனிதவளம் பாதிக்கப்படுகிறது என்று ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் தொழில்துறை வளர்ச்சி, அந்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாட்டில் அடங்கியுள்ளது. இன்றைய நிலையில், தரமான மனிதவளத்தை, பாலிடெக்னிக்குகள் வழங்க ஆரம்பித்துவிட்டன. அதேசமயம் பலவிதமான சிக்கல்கள், பாலிடெக்னிக்குகள் தங்களுக்கான அந்தஸ்தை பெறுவதில் முட்டுக்கட்டைப் போடுகின்றன. பயன்படுத்த இயலாத உபகரணங்கள், போதுமான நிதியின்மை மற்றும் தன்னாட்சியின்மை போன்றவை பாலிடெக்னிக்குகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு தடையாக உள்ளன. அதேசமயம், தனியார் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்த பயிற்சி மற்றும் மல்டிமீடியா, பேஷன், ஹோட்டல் மேலாண்மை மற்றும் பலவிதமான துறைகளில் விரிவான பயிற்சியளிக்கையில், நடுத்தர, கீழ்நடுத்தர மற்றும் அடிமட்ட மக்களால், அந்த தனியார் கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களை சமாளிக்க முடிவதில்லை. தற்போதைய தேவை இந்த நேரத்தில் மிகவும் முக்கிய தேவை என்னவென்றால், தொழில் நிறுவனங்கள் - பாலிடெக்னிக்குள் இடையேயான ஒத்துழைப்பு. தொழிற்சாலை தேவை என்ற அம்சத்தோடு இணையாதவரை, திறன்சார்ந்த கல்வி என்பது வீண். நாட்டின் பாலிடெக்னிக்குகளை நடத்தும் மாநில அரசுகள் தங்களின் முழுப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதில்லை. ஆனால், பாலிடெக்னிக் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் அரசும் மற்றவர்களும் செயல்பட வேண்டிய நேரமிது. அப்போதுதான், குறைந்த செலவில் அதிக திறன்வாய்ந்த மனித ஆற்றல்களை உருவாக்க முடிவதோடு, நாட்டின் தொழில்  வளர்ச்சியும் மேம்படும் என்ற தொழில்வளர்ச்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !