பிரதமருடனான கலந்துரையாடல் - தி.மலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை: ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள், வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கின்றனர். வரும் 5ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் மாணவர்களிடம் நேரடியாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களிடம், வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுகிறார். தமிழகத்தில், திருவண்ணாமலையில் உள்ள மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடுகிறார். கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரதமரிடம் கேட்க, ஆர்வமுடன் கேள்விகளை தயாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தேசிய தகவல் மையத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள வீடியோ கான்பிரன்ஸ் அறையில், மாணவர்கள் அமர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மாணவர்களுடன், கலெக்டர் ஞானசேகரனும் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைவர் சீனுவாசன் செய்து வருகிறார்.