சத்துணவு தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு மாணவர், பெற்றோரிடமும் கருத்து கேட்பு
பவானி: மத்திய, மாநில அரசால் சத்துணவுக்காக ஒதுக்கப்படும் நிதி, சரியான முறையில் சென்றடைகிறதா? என்பதை கண்டறிய, சத்துணவு தணிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது.இதில் சமூக தணிக்கை குழு அலுவலர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர், சுய உதவி குழுவினர், பள்ளி மேலாண்மை குழுவினர், மக்கள் பிரதிநிதிக்கள் மற்றும் பெற்றோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பர். இந்த வகையில் பவானியை அடுத்த பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில் செம்புளிச்சாம்பாளையம் மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை ஆய்வு நடந்தது. பள்ளியில் சத்துணவு சாப்பிடும், 300 மாணவர்களிடமும் உணவின் தரம், சுவை மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்தனர். மாணவர்களின் பெற்றோரை, அவரவர் வீட்டுக்கே சென்று சந்தித்த அலுவலர்கள், தரம் பற்றியும், வேறு ஏதாவது உணவு சேர்க்க வேண்டுமா என்றும் கேட்டனர்.