மலைவாழ் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுங்க! உண்டுஉறைவிட பள்ளி அமைக்க கோரிக்கை
உடுமலை : உடுமலையில், மலைவாழ் பகுதி குழந்தைகள், இடைநிற்றல் இல்லாமல் உயர்நிலைக்கல்வியை தொடர, ஒருங்கிணைந்த உயர்நிலை உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில் மட்டும்தான் மலைவாழ் பகுதி மாணவர்களுக்கான ஐந்து உண்டு உறைவிடப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஐம்பது குழந்தைகளுக்கு அனுமதி உள்ளது. தவிர, கற்றல் இடைநிற்றலை தவிர்க்க, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நடத்தும் சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி மையங்களும் உடுமலையில் உள்ளன.மலைவாழ் மக்களின் குழந்தைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உண்டு உறைவிடப்பள்ளிகள் மற்றும் அந்தந்த மலைக்கிராமங்களில் துவக்கப்பள்ளிகள் செயல்படுகிறது.உயர்நிலை கல்விக்கு அரசு பள்ளிகளில், கல்வியும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதியில், உணவு மற்றும் தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. துவக்கநிலை வரை மட்டுமே, கட்டாய கல்வியாக இருப்பதால், விருப்பமுள்ள பெற்றோர்தான், உயர்நிலை கல்விக்கு தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.ஒவ்வொரு உண்டுஉறைவிட துவக்கப் பள்ளிகளிலும், பதினைந்துக்கும் அதிகமான குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு முடிக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது, அதில் ஒரு சதவீதமாக மட்டுமே உள்ளனர்.மலைவாழ் குழந்தைகள் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் தொடர்வதற்கு, உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி அமைக்க வேண்டுமென, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில்தான் மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள, உயர்நிலை உண்டு உறைவிடப்பள்ளி கட்டாய தேவையாக உள்ளது.அரசு இவ்வசதியை ஏற்படுத்தினால், மலைவாழ் மக்களுக்கும், நம்பிக்கை உண்டாகும். துவக்க நிலையோடு, அக்குழந்தைகளின் கல்வி முடங்குவதால், கல்வி கற்றும் பயன்படுவதில்லை. மலைவாழ் குழந்தைகளின் உயர்நிலை கல்விக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.