உள்ளூர் செய்திகள்

இனி கற்பித்தல் மட்டும்! டிட்டோ ஜாக் தீர்மானம்

கோவை: கற்பித்தல் அல்லாத பணிகளில் இனி ஈடுபட மாட்டோம் என, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, ஆதரவு அதிகரித்து வருகிறது.தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான, எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கு, வாரந்தோறும் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு நடத்த, தொடக்கப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டரோ, லேப்டாப் போன்ற சாதனங்களோ வழங்கப்படவில்லை.இணையதள இணைப்புக்கு கூட, தொகை ஒதுக்கீடு செய்யவில்லை. இதோடு, அவ்வப்போது பல்வேறு தகவல்கள், ஆன்லைனில் பதிவேற்ற உத்தரவிடப்படுகிறது. எமிஸ் இணையதள பணிகளுக்கே, அதிக நேரத்தை செலவிட வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் தொடர்ச்சியாக புகார் அளித்தனர்.இதைத்தொடர்ந்து, ஆசிரியர் தினவிழாவில், அமைச்சர் மகேஷ், எமிஸ் இணையதள பதிவேற்ற பணிகளில் இருந்து, விரைவில் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர் என தெரிவித்தார். ஆனால், எந்த அடுத்த கட்ட பணிகளும் மேற்கொள்ளாததால், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டிட்டோஜாக் அறிவிப்புக்கு, ஆசிரியர்களின் வாட்ஸ்-அப் குழுக்களில் பெரும் வரவேற்பும், கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன. டிட்டோஜாக் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் அரசு கூறுகையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இனி, 16ம் தேதிக்கு பிறகு, ஆன்லைன் பதிவேற்றங்கள் மேற்கொள்ளமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அனைத்து ஆசிரியர்களும் ஆமோதித்துள்ளனர். எந்த மின்னணு உபகரணங்கள், இணையதள வசதியும் ஏற்படுத்தி தராமல், ஆன்லைன் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.கற்பித்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாமல், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே இனிவரும் காலங்களில், வருகைப்பதிவு தவிர பிற பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ள மாட்டோம் என்றார்.நீண்ட நாட்களாக புகைந்து வரும் இப்பிரச்னை, இப்போது பற்றியெரிய ஆரம்பித்துள்ளது. ஆசிரியர்களின் இந்த நிலையை, தி.மு.க., அரசு எப்படி கையாள போகிறது என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்