மதுரை புத்தகத் திருவிழா இன்று நிறைவு
மதுரை: மாவட்ட நிர்வாகம், பொதுநுாலக இயக்கம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் புத்தகத் திருவிழா இன்று (அக்.,22) நிறைவடைகிறது.புத்தகத் திருவிழா அக்.,12 ல் துவங்கியது. தினமும் காலை 11:00 மணிக்கு கண்காட்சி துவங்கி சிறார் கவியரங்கு, பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியுடன் மாலை 6:00 மணிக்கு சிந்தனை அரங்கில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பேசி வருகின்றனர். இன்று (அக்.,22) மாலை 6:00 மணிக்கு நர்த்தகி நடராஜின் தமிழமுது தலைப்பில் நடனம் இடம்பெறும். பானைத் தடம் தலைப்பில் ஓய்வு ஐ.ஏ.எஸ்.,அதிகாரி பாலகிருஷ்ணன், நவீன தமிழும் நவீன வாழ்வும் தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகின்றனர்.இரவு 9:00 மணியுடன் கண்காட்சி நிறைவடையும். அனுமதி இலவசம். வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. பபாசி செயலாளர் முருகன் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.நம் உடலுக்கு எப்படி நல்ல உணவு, மருந்து தேவையோ அதுபோல் மனம், ஆத்மா ஆரோக்கியத்திற்கு நல்ல புத்தகங்கள் தேவை என எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறிய அனுபவ வார்த்தைகளை கருத்தில் கொண்டு, புத்தகங்களை தமுக்கத்தில் தேடி வாங்க இன்றே கடைசி என்பதை மனதில் கொண்டு இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்வோம்.ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் இலவசம்புத்தகத் திருவிழா அரங்கு 23 மற்றும் 24 ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 ரொக்கம் அல்லது ஆன்லைன் அல்லது காசோலை மூலம் இன்று அரங்கில் செலுத்தினால் ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களை தேர்வு செய்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு.