கல்லுாரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
புதுச்சேரி: பதவி உயர்வு வலியுறுத்தி கல்லுாரி பேராசிரியர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி அரசுக்கு புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் ஏழு கல்லுாரிகள் உள்ளன. இதற்கு உரிய துணைப் பேராசிரியர்களை மத்திய தேர்வாணையம் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. இவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை, பதவி உயர்வு குறித்த கோப்புகளை தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டியது உயர்கல்வித்துறையின் பணி.இதனைக் கடந்த 15 ஆண்டுகளாக முறைப்படி செய்து, பதவி உயர்வு வழங்காமல் உயர் கல்வித்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பல பேராசிரியர்கள் பதவி உயர்வு இல்லாமல் பணி ஓய்வுபெற்றுவிட்டனர். பலர் இறந்துவிட்டனர். ஓரிரு ஆண்டுகளில் பல பேராசிரியர்கள் பணி ஓய்வுபெற உள்ளனர்.பதவி கேட்டு கவர்னர், முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், அரசு செயலர்களுக்கு பலமுறை கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தும், பல போராட்டங்களை நடத்தியும் துணைப் பேராசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வு இதுவரை கிடைக்கவில்லை. கல்வி அமைச்சர், முதல்வர் ஒப்புதல் அளித்த பிறகும் அதிகாரிகள் பதவி உயர்வு கோப்புகளை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை.புதுச்சேரி அரசு கல்லுாரி துணைப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு இணைப் பேராசிரியர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தி, நேற்று சட்டசபை அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.பேராசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கரையா முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் பெரியாண்டி, அறவாழி, சம்பந்தம், சங்கரையா, பழனிசாமி, ராமகிருட்டிணன் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, சிவசங்கர், முன்னாள் எம்.பி., ராமதாசு, ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் வாழ்த்தி பேசினர்.இப்போராட்டத்தில் காரைக்கால் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஏனாமிலும் போராட்டம் நடந்தது. மாணவர்களின் படிப்புக்குப் பாதிப்பு இல்லாத வகையில் ஞாயிற்றுக் கிழமையில் பேராசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.