உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆசை காட்டி அழைத்து கொத்தடிமையாக்கும் கொடூரம்

ஆசை காட்டி அழைத்து கொத்தடிமையாக்கும் கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், ஆட்சேர்ப்பு முகவர், வேலை செய்ய உள்ள நிறுவனம் போன்றவை குறித்து நன்கு விசாரித்து, பணிக்கு செல்ல வேண்டும்' என, அயலக தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துஉள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்பு களுக்காக, வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக, தகவல் தொழில்நுட்பப் பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் நாடுகளுக்கு, சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றதும், சட்ட விரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி நெருக்கடி தரப்படுகிறது. மறுப்பவர்களை கடுமையாக துன்புறுத்துகின்றனர்.

83 பேர் மீட்பு

இந்த நாடுகளில் இருந்து, கடந்த ஆண்டு மட்டும், 83 தமிழர்களை அயலக தமிழர் நலத்துறை மீட்டுள்ளது.இளைஞர்களை கவர்ந்து இழுத்துச் செல்லும் முகவர்கள், துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படுகின்றனர். இளைஞர்களுக்கு மிக எளிமையான நேர்காணல், தட்டச்சு தேர்வு நடத்தி தேர்வு செய்கின்றனர். அதிக சம்பளம், தங்குமிடம், நாடு திரும்ப விமான சீட்டு, விசா ஏற்பாடு செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர்.தகவல் தொழில்நுட்பப் பணி என நம்பிச் செல்லும் இளைஞர்களை, சட்ட விரோதமாக, தாய்லாந்து எல்லை வழியே, லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்குள்ள 'கோல்டன் டிரை ஆங்கிள்' என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில், கடுமையான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறை பிடிக்கப்படுகின்றனர்.தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா, வேலை வாய்ப்பை அனுமதிக்காது. சுற்றுலா விசா சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, 18 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

சட்ட நடவடிக்கை

இதுபோன்ற மோசடி வலையில், நம் இளைஞர்கள் மாட்டிக்கொள்ளாமல், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆள் சேர்ப்பு முகவர், வேலை செய்ய உள்ள நிறுவனம் குறித்து நன்கு விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும். விசாவின் உண்மைத்தன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் குறித்து, பயணிப்பதற்கு முன், அந்த நாடுகளில் உள்ள இந்திய துாதரகம் அல்லது இந்தியாவில் உள்ள அந்நாட்டின் துாதரகம் வழியே அறிந்து கொள்ள வேண்டும்.மத்திய அரசின் பதிவு பெறாமல், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் மற்றும் முகமைகள் மீது, காவல் துறை வழியே கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

உங்கள் சந்தேகங்களுக்கு!

 லாவோஸ் மற்றும் கம்போடியாவில், வேலைவாய்ப்பு குறித்த விபரங்களை, லாவோஸ் நாட்டில் உள்ள இந்திய துாதரகத்தின் தொலைபேசி எண் 856 - 20555 36568, இ - மெயில் முகவரி, cons.mea.gov.inஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம். கம்போடியாவில் உள்ள இந்திய துாதரகத்தை, cons.mea.gov.inஎன்ற 'இ - மெயில்' முகவரியில் தொடர்பு கொள்ளலாம் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை, இந்தியாவில் உள்ளவர்கள், 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் உள்ளவர்கள், 8069 009 901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 806 900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலரை, 90421 49222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சந்திரசேகர்
மே 27, 2024 12:12

வெளிநாட்டு வாழ்க்கை என்பது நாமே விரும்பி ஏற்று கொள்ளும் நரகம். அதில் பணத்தை சாம்பாதிக்கிறேன் என்ற பெயரில் அனைத்தையும் இழந்து விடுவோம்.


ஜும்லாபாபு
மே 27, 2024 11:38

உள்ளூரிலேயே கேரண்ட்டியாக ரெண்டு கோடி வேலை கிடைக்கும்போது ஏண்டா வெளிநாட்டு பைத்தியம்.புடிச்சு அலையுறீங்க?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி