உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி!: கழிவுநீரில் கரைந்து போன ரூ.1,479 கோடி

கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி!: கழிவுநீரில் கரைந்து போன ரூ.1,479 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையின் பிரதான ஆறுகளில் ஒன்று கூவம். திருவள்ளூர் மாவட்டம், கேசவரம் என்ற கிராமத்தில் கல்லாற்றின் கிளையாக கூவம் ஆறு உற்பத்தியாகிறது. சென்னை நேப்பியார் மேம்பாலம் அருகே கடலில் கலக்கிறது.மொத்தம் 72 கி.மீ., பாயும் கூவம் ஆறு, சென்னை மாநகரில் மட்டும் 20 கி.மீ., ஓடுகிறது. ஒரு காலத்தில், குடிநீராகவும், பாசனத்துக்கும் பயன்பட்டது.ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற நகர்மயமாதலால் தொழிற்சாலைகள் அதிகரித்தன. அவற்றின் கழிவுகள் கலக்கப்பட்டு, குப்பை போன்ற திடக்கழிவுகள் கொட்டப்பட்டு, கூவம் ஆறு மாசடைந்தது.இதை சீரமைத்து புதுப்பொலிவூட்ட, அரசு பலமுறை திட்டமிட்டது. தமிழகத்தின் பல முதல்வர்கள், கூவம் ஆற்றை சீரமைப்பதே லட்சியம் எனும் அளவிற்கு பேசி வந்தனர். ஆனாலும், தற்போது வரை அதை மீட்டெடுக்க முடியவில்லை.கடந்த 2015 - 16ம் நிதியாண்டில் 1,479 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில், கூவம் ஆற்றை துார்வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு, 129.22 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.ஆற்றங்கரையோரம் வசித்த மக்களை மறுகுடியமர்த்துவதற்காக 290.13 கோடி ரூபாய்; கழிவுநீர் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக 129.83 கோடி ரூபாய்; சுற்றுச்சுவர், வேலி அமைப்பதற்காக 122.99 கோடி ரூபாய்; மரம் நடுதல் மற்றும் அழகு படுத்துதல் பணிக்காக 20.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.அதன்படி, 1,479 கோடி ரூபாயில் 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டும், கூவம் ஆறு சென்னையின் பிரமாண்டமான கழிவுநீர் வாய்க்காலாகவே தொடர்கிறது.கூவம் ஆற்றில் கழிவுநீர் விடுவதை இடைமறித்து, சுத்திகரிக்கும் பணிகள், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, நேப்பியார் பூங்கா, சேத்துப்பட்டு ஸ்பெர்ட்டாங் சாலை, நுங்கம்பாக்கம் சாலை, மேத்தா நகர், அண்ணா நகர்,லேங்ஸ் கார்டன் சாலை, தெற்கு கூவம் சாலை, அமைந்தகரை என்.எஸ்.கே.நகர் உள்ளிட்ட 15 இடங்களில், 186.19 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீரை இடமறித்து சுத்திகரிக்கும் பணிகள் நடந்தன. தற்போது, கழிவுநீரை இடமறித்து சுத்திகரிக்கும் பணிக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.எனினும், மாசுபட்டிருக்கும் கூவம் ஆற்றில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதனால், சென்னைவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.கூவம், அடையாறு ஆகிய ஆறுகளை சீரமைப்பதற்காக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அவற்றுடன், பொதுப்பணி, நீர்வளம், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக மேம்பாட்டு இயக்கம்,சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,சென்னை நதிகள் சீரமைப்புஅறகட்டளை ஆகிய அரசு துறைகளும், கூவம் ஆறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.எனினும், தொடர்ச்சியாக நடக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால், கூவம் ஆற்றின் இயல்புநிலையை மீட்பது, எட்டாக்கனியாகவே உள்ளது.

தாரைவார்ப்பு@

@சென்னை நகர கட்டமைப்பிற்காக, கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் கூவம் கரையோரத்தில் தங்குவதற்கு, ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டனர். காலப்போக்கில், சென்னையை நோக்கி படையெடுப்போரின் வாழ்விடமாக கூவம் கரை மாறிப்போனது. கூவம் மறுசீரமைப்பு பணியில், 13,200 வீடுகள், கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேநேரம், பெரிய நிறுவனங்களில் கட்டுமானம் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டுமானம் ஆகியவற்றை அகற்றுவதற்கு பதிலாக, இந்நிலம் அந்நிறுவனங்களுக்கு நீதிமன்ற அறிவுறுத்தல்படி தாரைவார்க்கப்பட்டு உள்ளது.

கடுமையான சட்டம் வேண்டும்

சென்னையில், பெரிய நிறுவனங்கள் முதல் குடியிருப்புகள் வரை, குடிநீர் வாரியத்திற்கு வரி செலுத்த தயங்கி, மழைநீர் வடிகால்களில் நேரடியாக கழிவுநீர் இணைப்பை விடுகின்றனர். இந்த கழிவுநீர் இணைப்பை, கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, முழுமையாக துண்டிக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பை கொட்டுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும். இல்லை என்றால், கூவத்தை சுத்தப்படுத்துவது நீரில் போடப்பட்ட உப்பாகவே இருக்கும்.- எல்.இளங்கோ, பேராசிரியர், நீர்வள பொறியியல், ஐ.ஐ.டி., சென்னை

ஒருங்கிணைந்த பணி அவசியம்!

கூவம் ஆற்றை சுத்தப்படுத்த, அரசு பல பணிகள் மேற்கொண்டாலும், நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இரண்டு வழிமுறைகளை கடைப்பிடித்தால் கூவம் ஆற்றை, அதன் இயல்பில் மீட்க முடியும். ஒன்று கழிவுநீர் விடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்; மற்றொன்று கூவம் ஆற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டும். அதுபோன்று பல்வேறு இடங்களில் நீரை சேமிப்பதன் வாயிலாக நிலத்தடி நீர் கிடைப்பதுடன், மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் ஆற்றில் விட பல தன்னார்வ நிறுவனங்கள் தயாராக இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.- எஸ்.ஜனகராஜன், தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்கூவம் ஆற்றின் நீளம்: 72 கி.மீ.,சென்னையில்: 20 கி.மீ.,துார்வார ஒதுக்கிய நிதி: ரூ.1,479 கோடிசுத்திகரிப்பு நிலையம்: 15சுத்தமானது எப்போது: 2015 வெள்ளத்தில் (அடுத்த 5 மாதங்களில் நாசமானது)-அகற்றப்பட்ட குப்பை கழிவு: 1.69 கோடி கிலோ அகற்றப்பட்ட கட்டட கழிவு: 7.65 கோடி கிலோஆண்டுக்கு சராசரியாக அகற்றம்: 2,885 கோடி கிலோ10 மிதவை தடுப்பான்களால் துாய்மை பணி------------

கூவத்தின் பரப்பு தெரியவில்லை

கூவம் ஆற்றின் நீளம், எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு அகலம் போன்ற தரவுகள் அரசிடம் இல்லை. தகவலுக்கு ஒரு முழுமையான சர்வே எடுப்பது அவசியம். கூவம் ஆற்றில் கழிவுகள் எந்தளவுக்கு, எத்தனை மீட்டருக்கு இருக்கின்றன என்பதை கண்டறியவும் சர்வே எடுக்க வேண்டும்.அதற்கு மாற்றாக, கூவம் ஆற்றில் தடுப்புச்சுவர், வேலி அமைத்தல், புல் செடிகள், மரம் வளர்த்தல் போன்றவை, 'பவுடர்' பூசும் கதையாக தான் இருக்கும். குறிப்பாக, கூவம் ஆற்றில் நேரடியாக கழிவுநீர் விடுவதை தடுத்தால் மட்டுமே, கூவத்தில் நன்னீர் ஓடும்.

அடையாற்றுக்கு ரூ.1,500 கோடி!

அடையாற்றை சுத்தப்படுத்த, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் விடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டாலும், கூவம் ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட அதே பணிகள், இங்கும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் 2,00க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட உள்ளன. இந்த பணியில், 14 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆனாலும், வீடுகள், நிறுவனங்களில் இருந்து விடப்படும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்காதவரை தீர்வு ஏற்படுத்த முடியாது என, வல்லுனர்கள் கூறியுள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

JeevaKiran
ஜூலை 21, 2024 22:31

கூவம் என்பது ஒரு கால்வாய். உண்மையில் அது ஆறு இல்லை. ஆறு என்றால் எப்போதும் நீரோட்டம் இருக்கும். இதில் ஓடுவது சாக்கடை. சாக்கடையை தடுத்தால், கூவம் வறண்டு போகும். அதனால், இதை இப்படியே விட்டு விட்டு, இந்த பணத்தை வேறு நல்ல விஷயங்களுக்கு பயன் படுத்தலாம். ஆட்சியாளர்கள் மனசாட்சியோடு சிந்திக்கணும்.


Tetra
ஜூலை 21, 2024 18:23

ஆஹா ஆஹா அப்பா 120 கோடி, அப்பப்பா 1460 கோடி, அப்பப்ப்பா? 10000 கோடி? சிரிங்கப்பா


Mani . V
ஜூலை 21, 2024 10:25

கூவத்தை காரணம் காட்டியே ஆளாளுக்கு சுருட்டியதுதான் மிச்சம். இன்னும் எத்தனை குடும்பம் அதனால பல நூறு கோடிக்கு அதிபதி ஆகப்போகிறதோ? எல்லாம் அந்த முதல் புள்ளிக்காரருக்கே வெளிச்சம்.


james arul rayan
ஜூலை 20, 2024 21:37

கூவம் என்றாலே கழிவுநீர் செல்லும் ஆறு என்றாகிவிட்டது. கழிவுநீர் கூவத்தில் கலப்பதை தடுத்தால் கழிவுநீர் செல்ல புதிதாக ஒரு கழிவுநீர் ஆறு உருவாக்க வேண்டியதிருக்கும்.


S SRINIVASAN
ஜூலை 20, 2024 19:59

இதுதான் உண்மையான வாரிசு அரசியல். அப்பனுக்கு தப்பாத பிள்ளைகள். கூவம் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் மீட்டுக்கொண்டேயிருப்போம். சாக்கடைக்குடும்பம்.


RAAJ68
ஜூலை 20, 2024 19:11

குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக்கூடங்கள் சிதிலமடைந்து உள்ளன நிறைய இடங்களில். எப்பொழுது இடிந்து விழுமோ தெரியாது. அவைகளை எல்லாம் சீர் செய்யாமல் அல்லது இடித்து புதிய கட்டிடம் கட்டாமல் அரசு அலட்சியம் காட்டுகிறது. ஆனால் கூவத்தை சுத்தம் செய்கிறோம் என்று பல ஆயிரம் கோடிகளை வீணாக செலவு செய்து ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெற்றுக் கொள்கிறார்கள். கருணாநிதி காலத்திலும் கூவத்தில் படகு விடுகிறோம் என்று வீண் செலவு செய்தனர். மனசாட்சி என்று ஒன்று வேண்டும் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று.


ஆரூர் ரங்
ஜூலை 20, 2024 18:32

டைனோசர் பதுங்கியிருப்பதாக செய்தி வந்ததால் தாற்காலிக பணி நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த பேக்கேஜ் விரைவில் சின்னவரால் அறிவிக்கப்படும்.


metturaan
ஜூலை 20, 2024 17:25

முன்பு முதலை இருந்தது... கூவத்தை சுத்தப்படுத்த ஒதுக்கின நிதி ய முழுங்கிடுச்சு இப்போ கூவத்தையே காணோம்... சாக்கடை கழிவுநீரில் மறைகரைந்த கோடிகள்.. சபாஷ்


Rangarajan Cv
ஜூலை 20, 2024 16:03

Long time back, Cho carried out article , highly critical of that


SP
ஜூலை 20, 2024 12:50

கூவத்தை சுத்தம் செய்கிறோம் என்று ரூ.6 கோடியில் ஆரம்பித்து இப்பொழுது ரூ.1479 கோடிக்கு வந்துள்ளார்கள் இன்னும் எத்தனை ஆயிரம் கோடிகள் விழுங்குமோ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை