உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து தனியார் பள்ளி, கல்லுாரியில் பணம் பறித்தவர் கைது

வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து தனியார் பள்ளி, கல்லுாரியில் பணம் பறித்தவர் கைது

வடலுார், : வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி தனியார் பள்ளி மற்றும் கல்லுாரியில் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்கு, கடந்த 23ம் தேதிகாரில் வந்த டிப்டாப் ஆசாமி, வருமான வரித்துறை அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்டு கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் கல்லுாரி நிர்வாகியிடம், கோப்புகள் சரியாக இருப்பதாக கூறி, ஊரில் கட்டி வரும் கோவிலுக்கு நன்கொடை கேட்டார். கல்லூரி நிர்வாகத்தினர் ரூ. 32 ஆயிரம் கொடுத்தனர்.அப்போது, டிப்டாப் ஆசாமி, தனக்கு வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் பலரை தெரியும். யாருக்காவது வேலை தேவைப்பட்டால் வாங்கி தருவதாக கூறினார். அப்போது, கல்லூரி நிர்வாகி ஒருவர் தனது உறவினருக்கு வேலை வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு அவர் ரூ.3 லட்சம் செலவாகும் என்றார்.பின்னர், இதே கல்லுாரி நிர்வாகத்தின் கீழ் குறிஞ்சிப்பாடியில் இயங்கும் பள்ளிக்கு சென்று இதே பாணியை பின்பற்றி கோப்புகளை ஆய்வு செய்து, ரூ. 10 ஆயிரம் பணம் வாங்கினார்.அதையடுத்து கடந்த 25ம் தேதி, கல்லூரி நிர்வாகியை தொடர்பு கொண்ட டிப்டாப் ஆசாமி, நீங்கள் கேட்டபடி வேலை ரெடியாகிவிட்டது. பேசியபடி ரூ. 3 லட்சம் பணத்தை அனுப்பி வைக்குமாறு கூறி, பணி ஆணையையும் அனுப்பி வைத்தார். அதனை கல்லுாரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்ததில், போலி என்பது தெரிய வந்தது.தங்களை ஏமாற்றி, பணம் பறித்ததை அறிந்த பள்ளி நிர்வாகிகள், டிப்டாப் ஆசாமியை தொடர்பு கொண்டு குறிஞ்சிப்பாடி பள்ளிக்கு வந்தால் பணம் தருவதாக கூறினர். அதனை நம்பி நேற்று முன்தினம் மாலை காரில் குறிஞ்சிப்பாடி பள்ளிக்கு வந்த நபரை, குறிஞ்சிப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சந்திரசேகரன்,75; என்பதும், எம்.இ., பட்டதாரியான இவர் கடந்த 28 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சென்னையில் சொகுசு ஹோட்டலில் தங்கிக்கொண்டு, வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு, தமிழகம் முழுவதும் புதியதாக தொடங்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சென்று வருமான வரித்துறைஅதிகாரி போல் நடித்து பணம் பறித்து வந்துள்ளதும், இவர் மீது கரூர், மணப்பாறை, விராலிமலை, சத்தியமங்கலம் உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.இதுகுறித்து தனியார் பள்ளி தாளாளர் சட்டநாதன் அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, சந்திரசேகரனை,75; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை