| ADDED : ஏப் 06, 2024 05:37 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலுக்காக மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் வரும் 11, 12ம் தேதிகளில் நான்கு பிராந்தியங்களிலும் தயார் செய்யப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்தார்.அவர், கூறியதாவது:புதுச்சேரியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். அதனால் லோக்சபா தேர்தலில் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். புதுச்சேரி 967 ஓட்டுச்சாவடிகளில் 1,934 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 967 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். கூடுதல் இயந்திரங்களும் கைவசம் உள்ளன.மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வரும் 9ம் தேதி அனுப்பப்படும். இயந்திரம் செல்லும் வழியிலுள்ள மாநிலங்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளோம். பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து 60 சர்வீஸ் பொறியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.வரும் 11, 12 ஆகிய தேதிகளில் மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் நான்கு பிராந்தியங்களிலும் தயார் செய்யப்படும். புதுச்சேரியில் 30 மாதிரி ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மாகியில் 31 ஓட்டுப்பதிவு மையங்களை பெண்கள் நிர்வகிக்கின்றனர். தற்போது தபால் ஓட்டுகள் பெறும் பணியிலும் பெண்கள் மட்டும் இப்பிராந்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுச்சேரியில் குறைவாக ஓட்டுப் பதிவு உள்ள 77 ஓட்டுச்சாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று ஓட்டுப்பதிவுக்கு நடவடிக்கை எடுப்போம்.புதுச்சேரியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் புகார்கள் தொடர்பாக 1950 எண்ணின் வழியாக 417 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 16 புகார்களும் வந்தன.பதட்டமான 232 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக புதுச்சேரிக்கு 10 கம்பெனி ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ளது.இரண்டு கம்பெனிகள் வந்துள்ளன. மீதமுள்ள கம்பெனிகள் விரைவில் வர உள்ளன. வாக்காளர்களுக்கு தர பணம் வந்துள்ளதாக புகார்கள் ஏதும் வரவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.